Monday 5 August 2013

இரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை

பி.ஏ. பாஸ் இந்திப் படத்தின் மூலக்கதையான ஆங்கிலச் சிறுகதையை இங்கே தமிழில் தருகிறேன். 'Delhi Noir' என்ற சிறுகதைத் தொகுதியில் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.



டெல்லியில் அத்தை வீட்டில் என் வழக்கமான இருண்ட, ஒடுங்கிய வராண்டாவில் படுத்துக் கிடந்தேன். ஜன்னல் வழியாக பாஞ்ச்குயான் சாலையின் இரைச்சல்கள் என்நேரமும் கேட்டபடி இருந்தது. சுத்தமாகக் காற்றே இல்லை. குளிர்ச்சியான காலநிலை இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை. சிதறும் பட்டாசுகளின் கந்தக மணத்தால் மூச்சுவிடுவது கஷ்டமாக இருந்தது.

ஜலந்தரில் எங்கள் பழைய வீட்டில் தீபாவளியின்போது நான் ராக்கெட் மத்தாப்புக் கொளுத்த, என் தங்கைகள் ஒருவர்பின் ஒருவர் ஒளிந்துகொள்வது எனக்கு நினைவு வந்தது. அம்மா ஸ்வெட்டரும், தானே நெய்த உல்லன் சாக்ஸும் தருவார். இப்போது வரப்போகும் குளிர்காலத்துக்கு, தங்கைகளின் பழைய ஸ்வெட்டர் கிழிசல்கள் தைத்துத் தரப்பட்டாலே பெரிய விஷயம். நடுப்பட்டவள் ஒரு அநாதைப் பள்ளியில் படிக்கிறாள். இளையவள் எங்கள் வயதான தாத்தா வீட்டில்.

மறுநாள் எழுந்தபோது மூச்சுத் திணறியது. வீட்டில் சாப்பிடாமல் கிளம்பி பஹர்கஞ்சுக்கு நடந்து போனேன். ஒரு கப் டீ வாங்கிக்கொண்டு நேரு பஜார் பக்கத்திலிருந்த பெரிய கிறித்தவ மயானத்தின் தனிமையை நாடினேன். எனக்கு மிகவும் பிடித்த வேப்பமரத்தின் கீழ் புத்தகப் பையை வைத்துவிட்டு, என் செஸ் செட்டையும், சாம்பியன் காஸ்பரோவின் புகழ்பெற்ற மேட்சுகள் அடங்கிய புத்தகத்தையும் எடுத்துக்கொண்டேன். டீயைக் குடித்துவிட்டு, கிராண்ட் மாஸ்டரின் காய் நகர்த்தல்களைப் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். என்னைச்சுற்றி மூன்றுபுறமும் உதிர்ந்து விழும் சிமெண்ட் கல்லறைகள்.

கறுப்பும் வெளுப்புமான தலைமுடிகொண்ட இடுகாட்டுக் காவலாளி ஜானி பக்கத்தில் வந்ததை முதலில் தான் கவனிக்கவில்லை. அவன் என்னருகே முரட்டுக் கைகளைக் கட்டிக்கொண்டபடி நின்றுகொண்டிருந்தான். இருக்கமான முகத்தில் ஓடும் இளிப்போடு, ‘உனக்குத் தெரியுமா, விரித்து வைத்த செஸ போர்டு பழிவாங்க அலையும் ஆவிகளைக் கவர்ந்திழுக்கும் என்று? என்று கேட்டான். என்னைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளப்போகிறான் என்று நினைத்து, எல்லாவற்றையும் எடுத்துப் பையில் போட ஆரம்பித்தேன். அவனோ, என்னை மெயின் கேட்டுக்கு அருகிலிருந்த ஒர்க்ஷாப்புக்கு கூட்டிச்சென்றான். உள்ளே தொழிலாளிகள் மரத்தை அறுப்பதும், ஆணி அடிப்பதுமாக சவப்பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன் ஒரு மூலையில் இருந்த அவனது அலுவலகத்துக்கு ஜானி என்னை அழைத்துப்போனான். ஒரு இழுப்பறைக்குள் தேடி, என் ஹீரோ காஸ்பரோவின் எதிரி கார்ப்போவின் புத்தகம் ஒன்றை எடுத்தான். ‘காஸ்பரோவ் ஒரு முரட்டுக்காளை மாதிரி ஆடினார், முஷ்டியை மடக்கி உயர்த்தியபடி சொன்னான், ‘ஆனால் கார்போவ் ஒரு தந்திரமான நரி போல ஆடியவர். என்னிடம் அவன் செஸ் போர்டை எடுக்கச் சொன்னபோது, ஒரு புது நண்பன் கிடைத்ததை அறிந்துகொண்டேன்.



அன்று இரவு கல்லூரியிலிருந்து வீடு வந்தபோது அத்தை சொன்னாள், ‘சரிகா போன் செஞ்சு ஞாபகப் படுத்தினா. போய் ஆப்பிள் பழங்களை எடுத்துக்கிட்டு வா. மறுநாள் மதியம், பயத்தோடு, ஆனால் குறுகுறுப்போடு, சரிகா ஆண்ட்டி வீட்டுக்குப் போனேன். அத்தை இருக்கும் காலனியிலேயே வேறுபுறத்தில் இருந்தது அவள் வீடு. அப்போதெல்லாம் என் தங்கைகளை எவனாவது கேலி செய்தால் மூக்கு உடைந்துவிடும் என்று பள்ளியில் பசங்களுக்குத் தெரியும். என் அம்மா என்னைத் திட்டுவார், ஆனால் உள்ளூர அவருக்குப் பெருமையாக இருக்கும். ஆனாலும் ஒரு ஆண்ட்டியின் அத்துமீறல்களைத் தடுப்பது எப்படி என்கிற பாடத்தை மட்டும் நான் கற்றுக்கொள்ளவே இல்லை.

சரிகா வீட்டுக் கதவை உடலில் சுருக்கம் விழுந்த ஒரு வயதான பெண் திறந்தாள். சாம்பல்நிற சேலையும், அந்தப் புழுக்கத்திலும் ஸ்வெட்டர் ப்ளவுஸும் அணிந்திருந்னாள். கண்கள் காட்டராக்ட்.டால் மங்கியிருந்தன. ஒரு சென்ட்ரி மாதிரி வழி மறித்து நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய பஞ்சாபி கிராமிய வழக்கு எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘மாதாஜி, நான் மிஸஸ் வர்மாவின் தம்பி மகன் என்று அவளுடைய பல்லுப்போன மெதுவான முனகல்களுக்குப் பதிலாக திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தேன். ‘ஆப்பிள் பெட்டியை எடுத்துப்போக வந்தேன். கடைசியில் கதவை சற்றே கூடுதலாகத் திறந்தாள்.  என்ன சொல்கிறாள் என்று புரிந்துகொள்வதற்காக நான் சற்றுக் குனிந்தேன்.

‘சைத்தான் மகள், அவள் முணுமுணுத்தாள், ‘பொம்பள உருவத்தில் ஒரு சர்ப்பம். என் கையை வலிக்கும்படியாக இருகப் பிடித்தாள். ‘விஷம். அவளோட விஷத்துகிட்ட ஜாக்கிரதையா இரு.

நான் திரும்ப எத்தனித்தபோது சரிகா ஆண்ட்டி வந்துவிட்டாள். தளர்வான, மெல்லிய ஆடையை அணிந்துகொண்டிருந்தது ஏதும் ஸ்பெஷல் துணையை எதிர்பார்க்கவில்லை என்று உணர்த்தியது. அவளுடைய இறுக்கமான, கடைந்தெடுத்த உருவம், அன்றொருநாள் அத்தை வீட்டுக்கு வந்திருந்தபோது அணிந்திருந்தமாதிரி இறுக்கமான உடையில் இல்லாதபோதும் புலப்பட்டது. அங்கங்கே பழுப்பு கலந்த அவளுடைய கறுப்பு மயிர் இரண்டு தடித்த சடைகளாகப் பின்னப்பட்டிருந்தது. இது அவளது சிவந்த நீண்ட முகத்துக்கு ஒரு இனிய பாவத்தைக் கொடுத்தது. கழுத்தில் உத்திராட்ச மணிமாலை. வெற்றுக் கால்கள். அமைதியான, மினுங்கும் தோற்றத்தில் இருந்தாள்.   ஒருவேளை நான் பயந்தது தேவையற்றதோ?

‘கதவைத் திறக்காதீங்க பீபிஜி, வயதானவளிடம் கடுமையான  குரலில்  சொன்னாள். எவனாவது நேபாளி நம் குரவ்வளையை அறுத்துவிட்டால் என்ன செய்வது?

நான் கூடத்தில் நின்றுகொண்டிருந்தேன். அவள் விடாமல் பிதற்றிக்கொண்டிருந்த பீபிஜியை உள்ளே அழைத்துச் சென்றாள். அந்த வீட்டின் கட்டட அமைப்பு, அத்தை வீடு போலவேதான். எனினும் அத்தை வீட்டின் எளிமையான, பழசாகித் தேய்ந்துபோன ஃபர்னிச்சர்கள் மாதிரியின்றி இங்கு எல்லாமே ஆடம்பரமானவை. விலையுயர்ந்த கார்பெட்டின் மேல் மரத்தில் கடைந்தெடுத்த ஒரு சோபா, வெள்ளி சரிகைக் குஷன்களோடு இருந்தது. அதன் இருபுறமும் அகலமான, சாய்ந்து அமர வாகான நாற்காலிகள். நடுவில் சலவைக்கல் பொருத்திய மேசை. சுவர் மூலைகளில் வெண்கல அலங்கார விளக்குகள். நான் நினைத்துக்கொண்டேன்—சரிகாவின் கணவர், என் அப்பா உயிரோடிருந்தபோது வெறுத்த அதிகாரிகள் வகையைச் சேர்ந்தவராயிருக்க வேண்டும்—அவர்கள் தம் குழந்தைகளுக்கு ‘இனிப்புகள் வேண்டும் என்று காண்ட்ராக்டர்களைக் கேட்பார்கள். எனக்கு சேரவேண்டிய அப்பாவின் சம்பாத்தியம் இந்த மாதிரி பெருச்சாளிகளால் கொறிக்கப்பட்டுவந்தது.  

ஆனால் இங்கு குழந்தைகள் படம் எதுவும் கண்ணில் படக்காணோம். ஒரு கண்ணாடி அலமாரி மட்டுமே ஒரு குழந்தையின் இருப்பை சற்றுக் கோடிகாட்டுவதுபோல் இருந்தது—உள்ளே வரிசை வரிசையாகப் பொம்மைகள்—வண்ண உடைகளில் சர்க்கஸ் பொம்மைகள், அலங்காரமான தொப்பிகளோடு பார்ட்டி உடையணிந்த பொம்மைகள், திடுக்கிடச்செய்யும் பச்சைக் கண்கள் கொண்ட பொம்மைகள். எல்லாம் பொம்மை என்று தோன்றாத அளவுக்கு நேர்த்தியாகச் செய்யப்பட்டவை. பெரிய பொம்மைகள் நிஜம் போன்ற முகபாவனை கொண்டிருந்தன. ஒரு பொம்மை நீங்கள் போகுமிடமெல்லாம் திருட்டுப்பார்வையால் தொடர்ந்தது.

சரிகா திரும்பிவிட்டாள். என் பார்வை போன திசையைப் பார்த்துவிட்டு, ‘என் அப்பா வெளிவிவகாரத்துறையில் இருந்தார். என்றாள் பெருமையோடு. ‘இதெல்லாம் நான் சேர்த்தவை. நான் சிறுமியாக இருந்தபோது உலகம் பூரா சுற்றினோம்.ஒரு சோபாவைக் காட்டி, ‘உட்கார் என்றாள்.

நான் என்னிடமிருந்ததிலேயே மிகச் சிறந்த சட்டையைத் தேர்ந்தெடுத்து, அதை நானே அயர்ன் பண்ணி அணிந்துகொண்டிருந்தேன். இருந்தாலும் இப்போது பெரிய அதிகாரியின் வீட்டில் இருக்கும் ஒரு பியூன் மாதிரி உணர்ந்தேன். ‘ஆண்ட்டி, நீங்க போன் பண்ணதா அத்தை சொன்னார், என்று ஆரம்பித்தேன்.

‘இந்த ஆண்ட்டி-கீண்ட்டியெல்லாம் வேண்டாம்,சரிகா பட்டென்று சொன்னாள். இருவருக்குமிடையில் இரண்டடி தூரம்கூட இல்லை. ‘என் பேரைச் சொல்லியே கூப்பிடு.

‘அம்மா மட்டும் நான் கூப்பிடுவதைக் கேட்டால்—‘ என்று முட்டாள் மாதிரி ஏதோ உளறினேன்.

‘எங்கே, சொர்க்கத்திலிருந்தா?,தன்னையறியாமல் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

இருவரும் பேசாமல் இருந்தோம். அவள் விரல் நுனிகள் சற்றே நடுங்கிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். நகங்கள் அடர் மெரூன் நிறம் பூசப்பட்டிருந்தன. நாங்கள் அருகருகே அமர்ந்திருந்தோம். என் கண்கள் தாழ்ந்திருக்க, அவள் என்னை உச்சி முதல் பாதம் வரை அளவெடுப்பதுபோலப் பார்ப்பதை உணர்ந்தேன். என் பின்னங்கழுத்தில் ஊசிகளாகத் தைப்பது போன்ற உணர்ச்சி மேலிட்டது. அத்தை வீட்டில் பார்ட்டிகளின்போது சரிகா என்னைக் கேலி செய்தபோது ஏற்பட்ட அதே உணர்ச்சி. ‘வேலை ரொம்ப ஜாஸ்தியா, முகேஷ்?அல்லது, ‘எங்க வீட்டிலும் கொஞ்சம் வேலை இருக்கு. எப்ப வர்ரே?நான் லெமனேடும் பக்கோடாவும் விநியோகிக்கும்போது சப்தமாகக் கேட்டாள். அங்கிருந்த எல்லாப் பெண்களும் அவள் வழக்கம்போல தமாஷ் பண்ணுகிறாள் என்றுதான் நினைப்பார்கள் என்று அவளுக்குத் தெரியும். எங்களுக்கிடையேயிருந்த இடைவெளி ஒரு எலாஸ்டிக் பட்டிபோல இழுபட ஆரம்பித்தது. எந்நேரமும் அது அறுபடக்கூடும் என்று தோன்றியது. நான் அசௌகரியமாக நெளிந்தபடி, காலை மாற்றிப் போட்டுக்கொண்டேன். அவளுடைய துணிகரமான போக்கு என்னை நிலைகுலைய வைத்தது. அதேசமயம் என்னை சூடேற்றவும் செய்தது. மிகச்சற்றே தலை நிமிர்ந்போது, அவளது மெல்லிய சட்டைக்கடியில் ஒரு நிழல்போல தெரிந்த. அவளது பிரா சுவாசத்துக்கேற்ப ஏறி இறங்கியது தெரிந்தது.

பொறுமையில்லாமல் கேட்டாள் ‘ஏன் எப்பவும் அத்தை வீடே கதின்னு கிடக்க? உனக்குக் கல்லூரியில் வேறு நண்பர்கள் கிடையாது?

நான் பேசாமல் இருந்தேன். பணத்தைத் தீர்க்க வழிதேடுபவர்கள் வேண்டுமானால் கல்லூரி நண்பர்களுடன் படங்களுக்குப் போகலாம். நான் பழைய பஹர்கஞ்ச் இடுகாட்டில் செஸ் ஆடுகிறேன்.

அவள் இன்னும் நெருங்கி வந்தாள். ‘என்ன விஷயம்? என்னைப் பார்த்து பயப்படுறியா?என் கையை எடுத்து இயல்பாகத் தன் முழங்காலுக்கு சற்று மேலே வைத்துக் கொண்டாள். ‘அதும் உன்னைப் போல பலசாலி.

அவளது மிருதுவான கால்களுக்கு அடிபணிந்துவிடுவதற்கும், அதனால் விளையக்கூடிய அபாயத்துக்கும் இடையில் தவித்தேன். கையை இழுத்துக்கொண்டேன். ‘சரிகாஜி, நான் மரியாதையில்லாமல் நடந்துகொள்வதாக மற்றவர்கள் நினைத்துவிடுவார்கள்.

‘அப்படி யார் நினைக்கப் போகிறார்கள்?

வீட்டின் உள்ளிருந்து முனகல் சப்தம் கேட்த்து. ‘பீபிஜி, என்று கூப்பிட்டேன். என் கன்னங்கள் சூடேறியிருந்தன.

‘பீபிஜி தூங்குகிறாள். இடியே விழுந்தாலும் விழித்துக்கொள்ள மாட்டாள்.

‘நான் ஆப்பிள்களை எடுத்துக்கொள்ளவா? அத்தை காத்துக்கொண்டிருப்பார்.

‘நீ லேட் பண்ணிட்ட. கடைசிப் பெட்டியை இன்னிக்குக் காலைதான் கொடுத்துவிட்டேன். என் தம்பியோட தோட்டத்திலிருந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் இன்னும் கொஞ்சம் ஆப்பிள் வரும்.அவள் தன் மெல்லிய விரல்களை என் கூந்தல் வழியே ஓட்டினாள். என் உடலின் ஒவ்வொரு நாடி நரம்பும் முறுக்கேறியது. ‘பொம்பள மாதிரி எவ்வளவு அடர்த்தி. தலையை ஒழுங்கா சீவு. இல்லை, முடியை வெட்டிக்கோ,இரக்கமில்லாமல் சொன்னாள்.

என் முகத்தைப் பிடித்துத் தன்னை நோக்கித் திருப்பினாள். பிறகு என்னை முத்தமிட்டாள். அவள் நாக்கு என் வாய்க்குள்ளே போய் உடலில் எங்கெல்லாமோ எதிர்வினையை ஏற்படுத்தியது—என் கால் விரல்கள், என் வயிறு, துடித்துக்கொண்டிருந்த என் தொடைகள். என் இதயம் துடித்த வேகத்தைப் பார்த்தால் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்றே தோன்றவில்லை. கட்டுப்படுத்த நான் விரும்பவில்லை.


அவள் எழுந்து நின்று தனது பூஜை மாலையைக் கழட்டினாள். பிறகு தனது கமீஸைத் தலை வழியே உயர்த்திக் கழட்டினாள். அது காற்றில் ஒரு பதாகைபோல உப்பிப் பிறகு கார்பெட் மேல் மடங்கிவிழுந்தது. அவள் சல்வாரில், ஆண்களின் பைஜாமா போல ஒரு கயிறுகட்டியிருந்தது. அவள் கயிற்றைத் தளர்த்தியதும் சல்வார் ஒரு திரைச்சீலை போல நழுவி விழுந்நது. என் நடுப்பட்ட தங்கையின் உருவற்ற டிராயர்கள் கொடியில் தொங்கிக்கொண்டிருக்கும் காட்சி எனக்கு நினைவுக்கு வந்தது. சிறிதாக, அடர் நிறத்தில் லேஸ் வைத்திருந்த சரிகாவின் உள்ளாடை அவளது வெளிர்நிறத் தோலோடு கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. இடுப்பு விரிவைத் தவிர, அவள் உருவம் சிறிதாக, நான் நினைத்ததற்கும் அதிகமாகவே ஒரு பையனுடையதைப்போல இருந்தது.


முதுகுப்புறமாகத் திரும்பிக்கொண்டாள். ‘எழுந்திரு, உத்தரவிட்டாள். அவள் பலவீனமானவள் என்பதுபோலச் சற்றே தோன்றிய மாயை உடைபட்டது. கைகளைத் தனது பின்புறமாக க் கொண்டுவந்தாள். ‘இதைக் கழற்று.நான் அவள் பிரா ஹூக்குடன் என்னால் முடிந்தவரை போராடினேன். அவளுடைய பின்னோக்கிய பார்வையே அவள் முகத்தில் தென்பட்ட கேலியைக் காட்டியது.

என்னைப் படுக்கும்படி உத்தரவிட்டாள்; முழந்தாளிட்டு என் மேலாகக் குனிந்தபடி என் பட்டன்களையும், பக்கிள்ஸையும் கழற்ற ஆரம்பித்தாள். என் அண்டர்வேரை உருவியபின் சொன்னாள்; ‘நீ ரொம்ப ஒன்னும் பயந்துடலை போல. ஒரு நிமிஷம் நீ உண்மையான ஆம்பளை இல்லையோன்னு நினைச்சேன். இப்ப நீயும் எல்லாரையும் போலத்தான்னு புரியுது—அவசரக்காரன்.

என் கைகளை, நான் அதுவரையில் பெண் உடலில் கண்களை மூடியபடிக் கற்பனையில் மட்டுமே கண்டிருந்த பகுதிகளுக்குக் கொண்டு சென்றாள். என் கரங்கள் அவள் மார்புக்கோளங்களைச் சுற்றிவந்தன. வியர்வையில் பளபளத்த அவைகள் உயர்ந்து உச்சியை நோக்கிச் சென்றவிதம் என் தாடைகளை தாபத்தால் வலிக்க வைத்தது. அவளது காம்புகள் என்னுடையவற்றைவிட ரொம்பப் பெரிதில்லை, ஆனால் இன்னும் கருமையாகவும், கெட்டியாகவும் இருந்தன. என் வாயில் அவற்றின் சுவை கெட்டியான, உப்புக்கரித்த ரப்பரைப் போல இருந்தது. அவளது வயிற்றின் நடுப்பாகத்திலிருந்து மெல்லிய முடிகளின் வரிசை கீழிறங்கி, கால்களுக்கிடையிலிருந்த வேறுவிதமான அந்தகாரத்தை நோக்கிச் சென்றது.

சரிகா என்னுடைய முதலாவது, சொதப்பலான முயற்சியை இன்னொருமுறை ஈடுகட்ட அனுமதிக்கிற நல்ல மனுஷியாயிருந்தாள். ஆனால் அதற்குமுன் என் அத்தைக்கு போன் செய்தாள். நாங்கள் இருவரும் நிர்வாணமாக இருந்தோம். ‘முகேஷை பஹர்கஞ்சுக்குக் கொஞ்சம் பலசரக்குகள் வாங்கிவர அனுப்பியிருக்கேன். உனக்குப் பரவாயில்லைதானே, பம்மி?அத்தை அதற்குப் பதில் சொன்னபோது ரிசீவரை என் காதில் வைத்தாள்: ‘ஓ, தாராளமா. அவனைச் சாமான்கள் வாங்குவதில் எக்ஸ்பர்ட்டாக்கியிருக்கேன். மீதிப் பணத்தை மட்டும் சரியா தர்றானான்னு பாத்துக்க.

‘இப்ப, சரிகா சொன்னாள், ‘உன் ஆவலைக் கட்டுப் படுத்துவது எப்படின்னு சொல்லித்தர்றேன்.நான் கூச்சத்துடனேயே அவளைப் பின் தொடர்ந்து படுக்கையறைக்குள் சென்றேன். ஆனாலும் நான் திறமையைக் காட்டியிருக்க வேண்டும்; எனக்கு அவள் தந்த பரிசு வெகுநாட்கள் என்னிடமிருந்தது—என் முதுகிலும் பின்புறத்திலும் அவளது நகக் குறிகள்.

காலநிலை சற்றுக் குளிர்ச்சியானபோது, ஜானியுடன் அவனது அலுவலக அறையில் செஸ் ஆடிப் பொழுதுபோக்கினேன். அவன் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடமாட்டானா என்று பலசமயம் தோன்றும்; ஆனாலும் அவனுடைய கவனமான துவக்கங்களிலிருந்தும், எதிர்பாராமல் தாக்குகிற மிடில்கேம்களிலிருந்தும் நிறையக் கற்றுக்கொண்டேன்.

சரிகாவுக்கு, கொஞ்சம் பழசும், கொஞ்சம் புதுசுமான கலவைதான் பிடித்திருக்கிறது என்று கண்டுகொண்டேன். ஆரம்பிக்கும் முன்பு என்னைப் பல்துலக்கி, குளித்துவரச் சொல்வாள்—நான் முதலிலேயே அவற்றைச் செய்திருந்தாலும். நான் டவலை சுற்றிக் கொண்டு பாத்ரூமிலிருந்து வரும்போது படுக்கையில் சாய்ந்துகொண்டு பைப்பில் கஞ்சா புகைத்துக்கொண்டிருப்பாள். பஹர்கஞ்சில் ஒரு ரகசியமான இஸரேலி வியாபாரியிடமிருந்து அவள் கஞ்சா வாங்குவாள். முத்தமிடுவதை எப்போதும் அவள்தான் ஆரம்பித்தாக வேண்டும். அவளுக்கு முத்தம் ஆழமாகவும், முரட்டுத் தனமாகவும் இருப்பதே பிடித்தது. நான் அவளை வெறுமனே கட்டிப் பிடித்தபடி இருந்தால், பிடிபட்ட குதிரை போலத் துள்ளுவாள், கணைப்பாள். என் மார்பு முழுவதும் அவளது பல்பதிந்த தடங்கள். முதுகில் ஒரு தடவை அவள் செய்த பிறாண்டல்கள் ஆறியதோ இல்லையோ, மீண்டும் காயப்படுத்திவிடுவாள். அந்த நாட்களைப் பற்றி எனக்கு ஞாபகம் உள்ள சித்திரம் இதுதான்—கட்டிலின் பக்கவாட்டின் மேல் கைகளை ஊன்றியபடி முழங்காலிட்டுக்கொண்டு, பின்புறமாக மேலே கவிழும் என்னை ஊக்குவித்தபடி அவள்; விரிந்த கால்கள், பாதி மடங்கித் துடித்தவாறு நான்; அவள் கழுத்தைப் பின்னே எக்கியபடி, அழகிய வாயைக் குவித்து நீட்ட, அவளது முதுகுத்தண்டு அவள் தோலுக்கடியில் மாட்டிக்கொண்ட பாம்பு போல சுழன்று துள்ளும்.

என்னையும் முரட்டுத்தனமாகவே நடந்துகொள்ளச்சொன்னாள். ‘ம், கடி என்னை. பலமாக. பலமாக என்று சொன்னேனே?என்று மோகத்தின் இடையில் கத்துவாள். ஒருமுறை உச்சகட்டம் நெருங்கிவரும்போது நிறுத்தி, நிலையை மாற்றிக்கொண்டாள். ‘என் கழுத்தை நெறி. ம், பண்ணு. எப்ப நிறுத்தனும்னு நானே சொல்றேன்.நான் தயங்கினேன். அவளோ என்னைப் பலமாகப் பிசைந்து, எனக்கே அவளைக் காயப்படுத்த வேண்டும் என்று தோன்றவைத்துவிட்டாள். குரூரமும், கோபமும் என்னுள் கிளர, என் விரல்களை அவளது மென் கழுத்தைச்சுற்றி நெருக்கினேன். நல்லவேளையாக, சீக்கிரத்தில் என் பிடி தளர்ந்துவிட்டது. தினறிக்கொண்டும், இருமிக்கொண்டும் கண்ணாடியில் தன் கழுத்தைப் பார்த்துக்கொண்டாள். சற்றுத் தொலைவிலிருந்தபோதும் என்னால் நான் ஏற்படுத்திய தடங்களைப் பார்க்க முடிந்தது. என் தொண்டைக் குழிக்குள் வெட்கம்  பித்தநீர் போல எழுந்து கரித்தது. ‘இப்போதுதான் நாம் முன்னேற ஆரம்பித்திருக்கிறோம், என்று கண்களில் விநோதமான பரவசம் பளீரிட அவள் சொன்னாள்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு ஜானியுடன் செஸ் ஆடினேன். அவன் முறைத்தபடி விளையாட்டை நிறுத்தினான். ‘என்ன ஆச்சு முகேஷ்? ஆட்டத்தின் ஆரம்பத்தில், கண்டமேனிக்கு சிப்பாய்களைப் பலி கொடுக்கிறாய்

‘இல்லை, திட்டத்தோடுதான், என்று சொன்னேன். ஆனால் என் பொய் சிக்கிரமே வெளிப்பட்டுவிட்டது.

மூன்றாவது முறை நான் தோற்றதும் அவன் சொன்னான். ‘நான் நம் ஆட்டங்களை ரசிக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு நீ இங்கே வருவது சரியில்லை. போய் உன்போன்ற இளசுகளோடு கொஞ்சநேரத்தை செலவிடு.


அவனிடம் போகிறபோக்கில் அவசரமாக விடைபெற்றுக் கிளம்பினேன். அவன் என்னுடன் விளையாட விரும்பாவிட்டால், எனக்கு செய்வதற்கு வேறு வேலை இருக்கிறது—நான் வேப்பமரத்தடியில் உட்கார்ந்து கல்லூரிப் பாடங்களைப் படிக்கலாம்.

பிரகாசமான குளிர்கால ஆரம்பத்தில் இடுகாட்டின் நடுவில் ஓடிய பாதையில் நடந்துகொண்டிருந்தேன். உயர்ந்த சுவர்களுக்கு மறுபுறத்தில்தான் சந்தடி மிக்க நேரு பஜார் இருந்தது என்றாலும், இந்தப்புறத்தில் காகங்கள் கரைவதையும், வேலையாட்கள் சிலர் கடினமான நிலத்தைக் கோடாலியால் தோண்டுவதையும் தவிர வேறு ஓசைகள் இல்லை.அந்தத் தொழிலாளிகளின் அருகில் ஒருகணம் நின்றேன். நெஞ்சில் இப்போதெல்லாம் நான் உணரும் அழுத்தமான அந்த உணர்ச்சி. கெட்டிப்பட்ட சளிபோல. அவர்கள் தோண்டிய குழி ஒரு பெரிய ஆளுக்குப் பத்தாதது போலத் தோன்றியது. ஒருவேளை காணாமல்போன ஒருவனின் இறுதிச்சடங்குக்காக இருக்கலாம். அவன் சொந்த உபயோகப் பொருட்களை அடக்கம் செய்வதற்கான குழி மட்டுமே தேவை.

என் உடலிலிருந்த காயங்களை அத்தை பார்த்துவிடாமல் இருப்பதற்காக நான் பாத்ரூமுக்குள்ளேயே உடை மாற்றிக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். என் புது ஜீன்ஸையும், ஜாக்கெட்டையும் பற்றி அத்தை கேட்கவே செய்தாள். நான் அவற்றை மெயின் பஜாரில் மலிவாக வாங்கியதாகத் தெரிவித்தேன். அத்தை என் ஜாக்கெட்டின் லைனிங்கைப் பார்த்துவிட்டுக் கேட்டாள், ‘மெயின் பஜாரா, கொள்ளைக்காரன் பஜாரா? உண்மையில், அவைகளை வாங்க சரிகா பணம் கொடுத்திருந்தாள்; என் பாடாவதி உடைகள் அவளுக்குப் பிடிக்கவில்லையாம். என் தலைமுடியைத் திருத்திக் கொள்ளவும் பணம் கொடுத்தாள். அதையெல்லாம் பார்த்து அத்தை சொன்னாள், டெல்லிக் காற்றில் ஏதோ இருக்கிறது. நகரத்துப் பொய் புரட்டுகள் என்னமாய் விளைகிறது.

அத்தை கொடுக்கும் வேலைகள் தவிர, இப்போது நான் சரிகா வீட்டிலும் வேலைகளைச் செய்தேன். ஞாயிறன்று அவளது உலர்சலவைத் துணிகளை எடுத்துவரச் சென்றபோது, அவள் கணவன் சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தார். இடுப்பில் ஒரு தளர்வான குளியல் துண்டு மட்டும் கட்டியபடி ஒரு பீப்பாய் மாதிரி இருந்தார். பீபிஜி தரையில் அமர்ந்துகொண்டு, ஸ்டீல் தட்டில் பட்டாணிகளைப் பிதுக்கிக்கொண்டிருந்தாள். நான் மற்ற சமயங்களில் வரும்போது அவள் அறைக்குள் அடைக்கப் பட்டிருப்பதால் நான் அந்தப் பாட்டியைப் பார்ப்பது அபூர்வமாகியிருந்தது.  அவள் தட்டுத் தடுமாறி எழுந்துவந்தாள், ‘அவ என் காலைச் சங்கிலியால் கட்டிப்போடுகிறாள். ஆனால் நான் ஒன்றும் முட்டாளில்லை, கேட்டாயா?

என் கைகளில் முடிகள் குத்திட்டு நின்றன. அவள்  மிஸ்டர் கன்னாவிடம் என்ன புகார் சொல்லியிருக்கிறாளோ?’ ஆனால் அவர் வெறுமனே இருந்த இடந்திலேயே கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தார். அவருடைய பனியனுக்குள்ளிருந்து அவரது அகலமான மயிரடர்ந்த நெஞ்சுப் பகுதி எட்டிப்பார்த்தது. ‘பீபிஜி,’ அவர் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே வைக்காமல் கத்தினார், ‘பிரேக் லகாவ். இல்லை, உங்களைப் படுக்கைக்கு அனுப்பிடுவேன்.’ கிழவி தன் பட்டாணிகளுக்குத் திரும்பினாள்.

சரிகா உலர்சலவைத் துணிகளோடு வந்தாள். கணவனின் மூக்குக்கு அடியிலேயே சொன்னாள், அப்புறமா வா. மிஸ்டர் கன்னா ஒரு மணிக்கு கிளப்புக்குப் போயிடுவார், பியூன் இன்னிக்கு வெளியே போயிருக்கான்.

பீபிஜியின் முகம் வெறுப்பால் விகாராமானது. மிஸ்டர் கன்னாவோ தன் அடர்த்தியான புருவங்களை உயர்த்தினார், ஆனால் அவரது முகம் மற்றபடி பேப்பருக்குள் புதைந்தே இருந்தது. நான் கதவைச் சாத்திக்கொண்டு கிளம்பியபோது, அவர் சரிகாவிடம கடுமையான தொனியில் ஏதோ கேட்பது காதில் விழுந்தது.

அவள் சொன்னாள். ‘யாருமில்ல. மிசஸ். வர்மாவோட தம்பி மகன். நல்ல உதவியான பையன்.

டிசம்பரில் என் தாத்தா தூங்கிக்கொண்டிருக்கையிலேயே அவர் இதயம் நின்றுவிட்டது. நான் சரிகாவைச் சில வாரங்கள் பார்க்கவில்லை. அவளது முரட்டுத்தனமான கவனிப்புக்காக ஏங்க ஆரம்பித்தேன். அத்தை வீட்டில், என் பெற்றோரின் விபத்துக்குப் பிறகு நடந்த மாதிரியே அத்தைகளும், மாமாக்களுமாக மாநாடு போட்டார்கள். விவாதப்பொருள், என் தங்கை சோட்டியை யார் கவனித்துக்கொள்வது என்பது. ‘நாங்கள் ஏற்கனவே இங்கே ரொம்ப சிரமப்படுகிறோம், அத்தை நிர்த்தாட்சண்யமாகக் கூறினாள். இன்னொரு அத்தை சொன்னாள், ‘முகேஷ், உன் பி.ஏ.வைச் சீக்கிரமா முடி பேட்டா. எல்லோரும் உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான கோரிக்கைகளுக்கு வெற்று முகத்தையே பதிலாகத் தந்தேன். கேடுகெட்ட நேரத்தில் புனிதப் பயணம் போனதற்காக என் பெற்றோரையும் சபித்தேன். ஒரு மோசமான முதலீடு போல அதுதான் செலவுகளை முடிவில்லாமல் தந்துகொண்டிருக்கிறது. சோட்டியையும், நடுப்பட்ட தங்கை சோனு படித்துவந்த அநாதைப் பள்ளிக்கூடத்திலேயே சேர்ப்பது என்று முடிவாயிற்று. என் அத்தை என்னைக் கவனித்துக்கொள்ளும் தியாகத்துக்காக எல்லோரும் அவரைப் போற்றினர். தானங்களின் தயவில் உயிர்வாழ்வதன் அவமானம் என் வயிற்றில் திரிந்துபோன பாலைப்போல அமர்ந்திருந்தது.

புது வருடத்தில் சரிகாவுடன் என் கள்ள உறவு மீண்டும் ஆரம்பித்தது. அவளுக்கு என் குடும்பத்தில் என்ன நடக்கிறதென்று தெரியுமோ தெரியாதோ, அவள் அதுபற்றி ஒன்றும் கேட்கவில்லை. ஆனால், ஜனவரியில் எங்கள் மூன்றாவது சந்திப்புக்குப் பிறகு என்னிடம் ஒரு துண்டுச்சீட்டைத் தந்தாள். அதில் ஒரு பெண்ணின் முதல் பெயரும் ஒரு நம்பரும் இருந்தது. நான் குழம்பிப்போய் அவளைப் பார்த்தேன். அவள் சொன்னாள், நீ பணம் சம்பாதிக்க விரும்புகிறாய், இல்லையா?

நான் அவள் சொன்னதை முழுசுமாகக் கேட்டேன். பேப்பரில் குறிப்பிட்டிருக்கும் ஆண்ட்டி, சின்னச்சின்ன, ஆனால் முக்கியமான வேலைகளைச் செய்வதற்கு எனக்குப் பணம் தருவாள். நம்பிக்கையாக நடந்துகொண்டால், இன்னும் வேலைகள் கிடைக்கும்.

சரிகாவின் போனிலிருந்து நான் அழைத்தபோது அந்த ஆண்ட்டி இனிமையாகப் பேசினாள். அடுத்தநாள் என்னை வரச்சொன்னாள். அவள் பங்களா கோல் மார்க்கெட் அருகே டாக்டர்ஸ் லேனில் இருந்தது. சரிகா பெரிதாகப் புன்னகை செய்தாள். ‘சீக்கிரமா வந்து என்ன நடந்ததுன்னு சொல்லு. பிறகு அவள் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து கண்டிப்பான குரலில் சொன்னாள், ‘போகும்முன்பு ஒரு புது பனியன் வாங்கிக்க. டியாடரண்ட்டெல்லாம் ரெகுலரா போட்டுக்கிறதானே?

நான் சிரித்தேன். நாங்கள் ஒருமணி நேரம் வியர்த்துக்கொட்ட, ஆக்ரோஷமான உறவில் ஈடுபட்டு முடித்தபிறகு அவள் கேட்பதைப் பாருங்கள். நான் அவளை முத்தமிட முயன்றேன். அவளோ என் ஆவலைக் கண்டு சுழித்து என்னைத் தள்ளிவிட்டாள்.

டாக்டர்ஸ் லேனிலிருந்து திரும்பியபோது ஆவலுக்கு நேரெதிர் மனநிலையில் இருந்தேன். ‘சரிகாஜி, உதடு துடிக்கச் சொன்னேன், குழப்பத்துக்கு என்னை மன்னியுங்கள். நான் அந்தமாதிரிப் பையன் அல்ல.

‘ஓகோ, புருவத்தை உயர்த்தினாள். ‘பின்னே நீ எப்படிப் பட்ட பையனாம்?

நான் அவளோடு சண்டைபிடிக்கும் நோக்கத்தோடுதான் வந்திருந்தேன். ஆனால் அவளது ஆணவத்தோடு கூடிய தன்னம்பிக்கை என் உறுதியை உருக்குலைத்துவிட்டது. ‘அந்த ஆண்ட்டி... அவள் முதலில் எனக்குப் பணம் கொடுத்தாள். அது ரொம்ப ஜாஸ்தியாகத் தோன்றியது. அவள் தனக்கு என்ன வேண்டும் என்று சொன்னபோது, நான் அதைத் திருப்பிக் கொடுக்க முயன்றேன்.

‘அவள் என்னிடம் எந்தப் புகாரும் சொல்லவில்லையே.

‘என்னை வலுக்கட்டாயமாக இருக்கவைத்து விட்டாள். ‘நான் போக முயற்சி செய்தால் கூச்சல் போடுவேன், திருடன் என்று சொல்லி செமத்தியாக உதை வாங்க வைத்துவிடுவேன் என்று சொன்னாள். பணத்தை முழுதாக சரிகாவிடம் நீட்டினேன். ‘எடுத்துக்கங்க. எனக்கு இது வேண்டாம்.

அவள் அந்தக் கட்டிலிருந்து சில நோட்டுகளை மட்டும் உருவிக்கொண்டாள். ‘இதுதான் என் பங்கு, முகேஷ். இதை சம்பளம் வாங்கிச்செய்கிற ஒரு சமூகசேவையாக நினைத்துக்கொள்.

‘முடியாது, நான் கத்தினேன்.

‘அப்ப இனி இங்கே வராதே. என்னால் நம்பிக்கை வைக்கமுடியாத பையன்களை பொறுத்துக்கொள்ள முடியாது. நான் உனக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தேன். நீயோ அழுது புலம்பிக்கொண்டு வருகிறாய்.

‘அப்படிச் சொல்லாதீர்கள், ஏறக்குறைய வெடுக்கென்று சொன்னேன். என் தொண்டை வறண்டுவிட்டது.

‘இந்தப் பணத்தை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சிந்தித்துப் பார், என்று சொல்லியபடி என்னைக் கையைப் பிடித்து படுக்கையறைக்குள் இழுத்துச் சென்றாள். சிறிதுநேரத்துக்குப் பிறகு தன் மார்பகத்திலிருந்த கடிகளைப் பார்த்துக்கொண்டாள். ‘நான் உனக்கு நல்லாவே கத்துக் கொடுத்திருக்கேன், என்றாள். நல்ல வேளையாக மிஸ்டர் கன்னாவுக்கு லைட் போட்டுக்கிறது பிடிக்காது.

என் முதலாவது சம்பாத்தியத்தில் ஒரு மொபைல் போனும், அப்பாயின்ட்மெண்ட்களைக் குறித்து வைக்க ஒரு டைரியும் வாங்கிக்கொண்டேன். நான் அழைக்கிற நபருக்கு நான் கேட்கிற பெயர் புரியவில்லை என்றால், ராங் நம்பர் கிடைத்ததுபோல நடிக்க வேண்டும் என்பது விதி. சரிகா என்னை இரயில்வே மனைவிகள், லேடி டாக்டர்கள், தொழிலதிபர்கள், இளம் அலுவலக மேலாளர்கள் போன்றவர்களிடம் அனுப்பினாள். எனக்கு இப்போது நாங்கள் படுக்கையில் ஜோலியை முடித்தவுடன் அவள் குறுஞ்செய்திகளைக் கொடுக்க ஆரம்பிப்பது ஏன் என்று புரிந்தது. கோல் மார்க்கெட்டிலிருந்து பெங்காலி மார்க்கெட் வரை, தெற்கே சுந்தர் நகர் வரையிலும் பங்களாக்கள், வீடுகளுக்குள் போய் வந்தேன். சில ஆண்ட்டிகள் கன்னாட் ப்ளேசில் ஷாப்பிங் முடித்துவிட்டு டூட்டி சௌக்கிலிருந்த பாடாவதி டூரிஸ்ட் லாட்ஜில் சந்திப்பதையே விரும்பினார்கள். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றவேண்டும் என்பது சரிகாவின் அறிவுறை.

நான் சேவைசெய்த ஆண்ட்டிகள் பலரகம். அழகான சலிப்புற்றவர்கள், அழகில்லாமல், ஆனால் சாகசத்தை விரும்புபவர்கள், தங்களுக்கு வேண்டியதைக் கூச்சப்படாமல் கேட்டு வாங்குபவர்கள், கூச்சமும் தயக்கமும் கொண்டவர்கள் என. ஒருத்தி வேலை முடிந்ததும் சாப்பாடு கொடுத்தாள்; இன்னொருத்தி, நான் இருப்பது அவள் மரியாதைக்குக் குந்தகம் என்பதுபோலப் பணத்தை முகத்தில் வீசி எறிந்தாள். இருவருமே திரும்பவும் வரச்சொன்னார்கள். ஒரு ஆண்ட்டி அவளுக்குப் பிடித்த தொலைக்காட்சித் தொடரை படுக்கையிலிருந்தபடி பார்க்க விரும்புவாள். நான் அவளை சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கும்போது நான் தவறவிட்ட எபிசோடுகளை உற்சாகமாக விவரிப்பாள். ஒருத்தி நாங்கள் உறவுகொள்ளும்போது தன் கணவனை வாய்க்கு வந்தபடித் திட்டித் தீர்ப்பாள். அது அவளுக்கு உச்சகட்ட உன்மத்தம் தந்தது. பெரும்பாலானவர்கள் தம் கணவர்களைப் பற்றிப் பேசுவதேயில்லை. நான் அவர்களது உத்தரவு அல்லது வேண்டுகோளுக்கு உடனடியாகச் செவிசாய்த்ததை அவர்கள் ரசித்தார்கள். சரிகா எனக்குக் கற்றுக்கொடுத்திருந்த நாக்கு, விரல் வித்தைகளை அவர்கள் விரும்பி அனுபவித்தார்கள்.

அத்தைவீட்டு வராண்டாவில் கடினமான கட்டிலில் விழித்தெழுவேன், அன்றைய அப்பாயிண்ட்மென்ட்கள் நினைவு வரும், எல்லாம் கற்பனையோ என்று ஒரு கணம் தோன்றும். உடனே அடிமுதுகிலும், தொடையிலும் வலியை உணர்வேன். ஓரிரு முறை அத்தை என்னைக் கண்களை இடுக்கிக்கொண்டு கூர்ந்து பார்த்ததைக் கண்டேன். என்மேல் அதை வாசனை பிடித்துவிடுவாள் என்று பயந்தேன்—அதாவது களங்கத்தை.

குளிர்காலம் ஏறக்குறைய முடிந்திருந்த தருணத்தில் என் தங்கைகளின் ஹாஸ்டலுக்கு ஒரு துணிப் பார்சலை அனுப்பி வைத்தேன். ஸ்வெட்டர்கள், உல்லன் காலுறைகள், புது காலணிகள். சரிகாதான் என்ன அளவு, நிறங்களில் வாங்குவது என்பது பற்றிப் போகிற போக்கில் சொல்லிக்கொடுத்தாள். நான் ஒரு மட சாம்பிராணியாம். ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளிக் கொலுசுகளை வாங்கி என் வாராந்திர கப்பத்தொகையுடன் சேர்த்து அவள் படுக்கை மீது வைத்தேன். ‘பணம் போதும். பரிசெல்லாம் வேண்டாம், என்று சொல்லிவிட்டாள். அந்தக் கொலுசுகளை அவள் அணிந்துகொள்ளவில்லை.

ஜானிக்கு ஜன்பத் கலைப்பொருள் கடை ஒன்றிலிருந்து ஒரு செஸ் செட் வாங்கிக் கொடுத்தேன். அதன் காய்கள் கறுப்பு, வெளுப்பு மரங்களில் கடையப்பட்டவை. அவனுக்கு என்னைத் திரும்பவும் பார்த்ததில் மகிழ்ச்சி. ‘நான் இதற்காக உனக்குக் கடன்பட்டிருக்கிறேன், என்று சொன்னான். அவன் பட்ட கடனைக் கொஞ்சம் தீர்க்கும் விதத்தில் எங்கள் அடுத்த ஆட்டத்தை மிகவும் கவனத்துடன் ஆடி, ஒரு ஆக்ரோஷமான, ராஜாவும் சிப்பாயுமான கடைசிக்கட்ட ஆட்டத்தோடு அவனைத் தோற்கடித்தேன். எங்களிடையே சற்றே ஏற்பட்டிருந்த சங்கடம் அகன்றது.

அத்தை என் புதிய காலணிகளைப் பற்றிக் கேட்டபோது நான் ஆச்சரியப்படவில்லை. சரிகா ஆண்ட்டி எனக்குக் கொஞ்சம் டியூஷன் வாய்ப்புகளைப் பிடித்துக் கொடுத்திருப்பதாகச் சொன்னேன். ‘ரெண்டு பேரும் எங்கிட்ட இதுபத்தி ஒன்னுமே சொல்ல்லையே, என்றாள். ‘ஜாக்கிரதையா இரு பேட்டா. அந்தப் பொம்பளை ரொம்ப தந்திரக்காரி.

கோடைகாலம் நெருங்கியபோது, என் புத்தகப்பையிலிருந்த பணக்கட்டு பெரிதானது. அதன் அளவு எனக்கு உற்சாகத்தையும், கூடவே பதட்டத்தையும் கொடுத்தது. பஹர்கஞ்சில் ஒரு அறையை வாடகைக்குப் பிடிப்பது பற்றிக் கனவுகண்டேன். என் தங்கைகளை என்னுடன் அழைத்துவந்து வைத்துக்கொள்வேன். முதலில் கொஞ்சம் சிரம்மாகத்தான் இருக்கும். அத்தை கோபித்துக்கொண்டதுபோல நடிப்பாள், ஆனால் உள்ளூர நிம்மதியடைவாள்.

நான் ஒரு வங்கிக்கணக்கு ஆரம்பிக்க முயன்றேன். அவர்களோ எனக்கு வரும்படி வரும் விதத்தை விசாரித்ததோடு, என் கார்டியனின் அடையாள அட்டை வேண்டும் என்றார்கள். பேசாமல் சரிகாவிடம் போய், என் சம்பாத்தியத்தின் பெரும்பகுதியை வைத்திருக்கும்படிக் கேட்டேன்.

‘என்னை இந்த அளவுக்கு நம்பாதே, என்றாள், சீரியஸாக.
‘எனக்கு இதை வைக்க வேறு இடம் இல்லை, என்றேன்.

புன்னகை செய்தாள். ‘நான் வட்டி வசூலிப்பேன்.
‘தெரியும், என் மார்பைப் பிராண்டிவிட அவள் செய்த முயற்சிகளைத் தடுத்தபடிச் சொன்னேன். ‘இது அந்தமாதிரி வங்கிதான்.

ஒருநாள் தகிக்கும் மத்தியான வேளையில் என்னை அவள் கட்டில்கட்டைகளோடு சேர்த்துக் கட்டிப்போட்டிருந்த நேரத்தில், நாங்கள் காலடி ஓசையையும், தொடர்ந்து படுக்கையறைக் கதவு தட்டப்படுவதையும் கேட்டோம். நான் முதலில் பீபிஜி தப்பித்துக்கொண்டுவிட்டாள் என்று நினைத்தேன். பிறகு கதவு பிளந்தது; மிஸ்டர் கன்னா தனது புரவுன் சஃபாரி உடையில் எங்கள் முன் நின்றுகொண்டிருந்தார். நாங்கள் மடத்தனமாக பின்கதவைப் பூட்ட மறந்துவிட்டோம். நான் கட்டுகளிலிருந்து கையைத்திருகி இழுத்து விடுவித்துக்கொண்டேன். என் மணிக்கட்டுகள் பூராவும் சிராய்ப்புகள்.

சரிகாவின் முகத்தில் பயச்சாயல் பூத்தது; ஆனால் கணநேரம் மட்டுமே. மிகைப்படுத்தப்பட்ட நிதானத்தோடு நடந்துசென்று தனது பிராவையும் குளியல் துண்டையும் எடுத்துக்கொணாடாள். நான் கழற்றிக்கிடந்த என் ஜீன்ஸ், டீ-ஷர்ட்டுக்குள் தட்டுத்தடுமாறி நுழைந்துகொண்டேன்.

‘உங்களால் நாகரிகமான மனுஷனாக கதவைத்தட்டிவிட்டு வரமுடியாவிட்டால், குறைந்தபட்சம் வேறுபுறமாகத் திரும்பிக்கொள்கிற மரியாதையாவது இருக்கவேண்டும், தன் கணவனிடம் சொன்னாள். ஆனாலும் அவள் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.

மிஸ்டர் கன்னாவின் அகன்ற குரூரமான முகம் ஒருபுறமாக இழுத்துக்கொண்டாற்போலத் தோன்றியது. ‘இவ்வளவுநாள் அந்தக்கிழவி ஒரு அரைப் பைத்தியம், உளறுகிறாள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன், கரகரப்பான குரலில் சொன்னார். ‘ஒருநாள் என்னையே கேட்டுக்கொண்டேன்—அஷோக், சரிகா உன்னை எதற்காவது நச்சரித்து எவ்வளவு நாளாகிறது? திருப்தியாக இருக்கிறாள். என்ன மாறியிருக்கிறது? தனது உதடுகள் வறண்டுபோன மாதிரி அவர் ஈரப்படுத்திக்கொண்டார். ‘நீ நிச்சயம் புத்திசாலிதான் சரிகா. உன் தந்திரங்களைக் கண்டுபிடிக்க நான் vrvrவைத்த ஆளுக்கு நீண்டகாலம் தேவைப்பட்டது. அவர் ஒரு காகித உறையை அவள்மேல் வீசி எறிந்தார். தரையெல்லாம் போட்டோக்கள் சிதறின.

‘கெட் அவுட், தரையைப் பார்த்தபடி சரிகா சொன்னாள். அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்று புரிந்துகொள்ள எனக்கு ஒரு நொடியானது. நான் துணுக்குற்றேன். ஆனாலும் அவளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டேன். ‘ம், போ, சீறினாள். ‘நான் பார்த்துக்கிறேன்.

ஸாரி அங்கிள்ஜி, மிஸ்டர் கன்னாவைக் கடந்தபோது முட்டாள்தனமாக முனகினேன். அவரது தடித்த குட்டையான விரல்கள் ஏதோ கண்ணுக்குத்தெரியாத ஒரு தடியைப் பிடித்திருப்பதுபோல மடங்கியிருந்தன.

‘பேட்டா, அவர் சொன்னார், உங்க அத்தையை உனக்கு சங்கு சேகண்டிக்கு ஏற்பாடு பண்ணச்சொல்.

நான் என் புத்தகப் பையை சாப்பாட்டு மேசையிலிருந்து கவர்ந்துகொண்டு ஓட்டமெடுத்தேன். பீபிஜி விடுவிக்கப்பட்டு, தரையில் பட்டாணிகளைப் பிதுக்கிக்கொண்டிருந்தாள். முன்னும் பின்னும் அசைந்தாடியபடி  சத்தமாகப் புலம்பிக்கொண்டிருந்தாள்.

அன்று இரவு நான் அத்தை ஃப்ளாட்டுக்குப் படி ஏறியபோது கூண்டில் அகப்பட்ட பறவைபோல என் இதயம் துடித்தது. எல்லோரும் டிவியை வெற்றுப்பார்வை பார்த்தபடி இருந்தார்கள். ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் நினைத்தேன். சரிகா எப்படியோ சரிக்கட்டிவிட்டாள். பின் அத்தை எழுந்து என்னை வராண்டாவுக்குத் தன்னோடு வரச்சொன்னாள். என் அத்தை பிள்ளைகள் முகத்தில் கேலிச்சிரிப்பு ஓடியது. என் கால்கள் ஈயம்போலக் கனத்தன.

மிஸ்டர் கன்னா இங்கு வந்திருக்கிறார். நான் சரிகாவிடம் கூடுதல் பணம் கேட்டு வந்திருந்தேனாம். என் அத்தை சாப்பாடு போடவில்லை, பணமும் கொடுக்கவில்லை என்று புகார் சொன்னேனாம். நான் அதுவரையில மரியாதையாக நடந்துவந்திருந்ததனால் சரிகா அதைக் கேட்டாளாம். பிறகு, பீபிஜி பார்த்துக்கொண்டிருக்க, சரிகாவைக் கட்டிப்பிடிக்க முயறேனாம். என் சுவாசத்தில் மலிவான சாராய நாற்றத்தைக உணர்ந்த அவள் என்னைப் பிடித்து மெதுவாகத் தள்ளினாளாம். எனக்கு வயசுக்கோளாறு. அந்த வயதில் ஒரு பெண்ணின் கவனிப்புக் கிடைத்தால் முட்டாள்தனமான யோசனைகள் வருவதுண்டுதான். ஆனாலும் நான் பிடிவாதம் பிடித்தேனாம். ஒரு முத்தம் வேண்டும் என்று வம்பு பண்ணினேனாம். சரிகாவின் கையைப் பிடித்து நான் பலமாக இழுத்ததில் அவளுக்கு ரொம்ப காயம் பட்டுவிட்டதாம்.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அந்தக் காயத்தை யார் பண்ணியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அத்தை முகம் ஏகத்துக்குச் சிவந்திருப்பதைப் பார்த்தேன்.

‘உனக்கு உன் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொள்ள இன்னும் ஒரு மணி நேரம் தருகிறேன், அத்தை  சொன்னாள்.

எனக்குக் கோபம் வந்தது. ‘நான் எங்கே போவேன்? என்றேன். கல்லூரித் தேர்வுகளுக்கு ஒரு வாரமே இருந்தது.

‘எனக்குத் தெரியாது. யாராவது நண்பனோடு தங்கு. நீ தான் நிறைய சம்பாதிக்கிறியே, ஒரு ஹோட்டலுக்குப் போ. உன் புதுப் பழக்கங்களையெல்லாம் நல்லா வளர்த்துக்க—விதவிதமா துணிமணி, இப்ப, குடி வேற.

‘மிஸ்டர் கன்னா உங்ககிட்டசொன்னது எதுவும் உண்மையில்லை, என்றேன்.

‘சரிகாவைப் பத்தி ஊருக்கே தெரியும், பேட்டா. ஆனால் இப்ப மானம் போச்சு. காரணம் என்னவா இருந்தாலும் கன்னாவுக்கு நீ இங்க இருக்கறது தெரிஞ்சா சும்மா விடமாட்டார்.

நான் போகும் நேரத்தில் சில நூறு ரூபாய் நோட்டுகளை என்கையில் திணித்தாள். நான் மறுக்கவில்லை, ஆனால் வெளியில் போகும்போது நோட்டுகளை வீட்டின் தபால்பெட்டிக்குள் போட்டுவிட்டேன்.

என் பைகளை வைத்துக்கொண்டு மயானத்தின் கதவுகளுக்கு வெளியில் தங்கினேன். பஹர்கஞ்சில் மலிவான லாட்ஜுகள் ஏராளம். ஆனால் நான் பரம ஏழையாக வாழ்வது எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ளும் மனநிலையில் இருந்தேன். காற்றில் தூசியும் வாகனப்புகையும் நிறைந்திருந்தது. ராம்த்வாரா சாலையில் நள்ளிரவு வரை சுறுசுறுப்பான போக்குவரத்து இருந்தது. ஜனங்கள் ஹிஸ்ஸ் என்று ஒலியெழுப்பிய காஸ் விளக்குகளின் ஒளியில் காய்கறிகள் வாங்கிக்கொண்டிருக்க, அழுக்கான உடையணிந்த வெளிநாட்டுக்காரர்கள் ஹஷீஸ் அடித்த போதையோடு தங்கள் குடிசைகளுக்குத் தட்டுத் தடுமாறிப்போனார்கள். சற்றைக்கெல்லாம் மார்க்கட்டை மூட ஆரம்பித்தார்கள். வியாபாரிகள் பலபேர் அவர்களது வண்டி அல்லது ஸ்டாண்டுகளின் மேலேயே படுக்கைகளைப் போட்டுக் கொண்டார்கள். காய்கறிகள் அழுகும் நெடி இரவின் வெப்பத்தில் தேவைப்படாத ஒரு போர்வையைப் போலக் காற்றில் தொங்கியது. ஹோட்டல்களின் மொட்டைமாடிகளிலிருந்து வந்த டிஸ்கோ இசை இரவின் அமைதியை உடைத்துக்கொண்டிருந்தது.

நடு இரவில் நான் துள்ளியெழுந்தேன்.  யாரோ என் மூட்டைமுடிச்சுகளை அடித்துச்செல்லப் பார்ப்பதுபோல உரசுகிறார்கள். இல்லை, அது நாய்கள்தான். பென்னம்பெரிய எலிகளைத் துரத்திக்கொண்டு ஓடுகின்றன.

காலையில் ஜானி என்னைத் தன்னுடைய பேச்சிலர் ஜாகைக்கு அழைத்துச் சென்றான். நான் எனக்கும் என் தங்கைகளுக்கும் என்று கற்பனை செய்திருந்தது மாதிரியான இடம்—ஒரு சிறிய சந்துக்குள் ஒற்றை அறை. நான் ஆண்ட்டிகள் சிலரை சந்தித்திருக்கும் ஒரு லாட்ஜிலிருந்து பக்கம்தான். அந்த அறை, அரசமரம் வைத்திருந்த ஒரு பொது முற்றத்தை நோக்கியிருந்தது. ஒரு கெரசின் ஸ்டவ், கொஞ்சம் அலுமினியப் பாத்திரங்கள், ஒரு மரக்கட்டில் மற்றும் ஒரு டிரங்க் பெட்டி ஆகியவையே ஜானியின் சொத்து. குடும்பம் சம்பந்தமான போட்டோக்கள் எதுவும் இல்லை. அங்கு கவனத்தைக் கவரும் விதத்திலிருந்த ஒரே விஷயம் சுவரில் டேப் போட்டு ஒட்டியிருந்த ஒற்றைப் போஸ்ட்கார்டுதான். நீல வானமும் வெண்மணல் கடற்கரையும் அதிலிருந்தன.

‘என் மொரிஷியஸ் கசின் அனுப்பியது. என்னையும் வரச்சொல்லிக் கூப்பிடுகிறான். ஆனால் எனக்கு ரொம்ப வயசாகிவிட்டது.

‘தேங்க் யூ ஜானி. என் பரீட்சைகள் முடிந்த கையோடு நான் வேறு இடம் பார்த்துக்கொள்கிறேன்.

‘தினசரி இரவில் என்னோடு செஸ் ஆடுவதாக இருந்தால் நீ என்றைக்கும் இங்கேயே தங்கலாம்.

அன்று மாலை நான் படித்துக்கொண்டிருக்கும்போது மின்சாரம் போய்விட்டது. அவன் என் தொடைமீது கையை வைத்தபடி வேறு ஒரு கோரிக்கை வைத்தான். முதலில் நான் பதட்டமும் பயமும் கொண்டேன். ஆனால், என்னுடைய முந்தைய காதலி மாதிரியில்லாமல் இவன் பலப்பிரயோகம் செய்யும் முன் என்னை மிகவும் மென்மையாகக்  கையாண்டான். அவனது குட்டையான, வலிமையான கைகளால் அணைக்கப்பட்டுக் கிடந்ததை நான் விரும்பினேன் என்று பின்னர் புரிந்துகொண்டேன்.

சரிகா என்னிடமிருந்து செய்தி எதிர்பார்த்திருப்பாள் என்று தெரியும். நாங்கள் கணக்கு வழக்குகளைத் தீர்க்க வேண்டும், அடுத்தது என்ன என்று முடிவுசெய்ய வேண்டும். நான் எவ்வளவு பக்கத்தில் இருக்கிறேன் என்று அவளுக்குத் தெரிந்தால், நாங்கள் சந்திப்பதற்கு ஏதேனும் ஏற்பாடு செய்ய முடியும். என்னைக் காட்டிக் கொடுத்தது பற்றி அவள் கண்டிப்பாக வருத்தப்பட்டுக்கொண்டிருப்பாள் என்று நம்பினேன்.

இதற்கிடையில் தொழிலை நானாகத் தொடங்கவேண்டியிருந்தது. தேவிகா என்ற மாற்றுப் பெயர் கொண்ட ஆண்ட்டியை போனில் அழைத்தேன். எனக்கு நன்கு பரிச்சயமான குரலில் அந்தப் பெண் சொன்னாள், ‘ராங் நம்பர். நான் கவலைப்படவில்லை. நான் கூப்பிட்ட வேளை சரியில்லை என்று அர்த்தம், அவ்வளவே. ஆனால் இரு நாட்களுக்குப் பிறகு, அந்த எண் துண்டிக்கப்பட்டிருந்தது. இப்படியாக, என் டைரியில் இருந்த எண்கள் அத்தனையும் ஒவ்வொன்றாக உபயோகத்திலிருந்து மறைந்துகொண்டிருந்தன, ஏதோ ஒரு மர்மக் கரத்தால் பிடுங்கப்பட்டதுபோல.

டாக்டர்ஸ் லேனிலிருந்த ஆண்ட்டி வீட்டுக்கும், பெங்காலி மார்க்கெட்டில் எனக்குப் பழக்கமான இன்னொரு வீட்டிக்கும் சென்று பார்த்தேன். இரண்டு இடத்திலும் அழைப்பு மணியை அடித்து, கதவைத் தட்டியும் ஒருவரும் திறக்கவில்லை.

‘நண்பா, அந்தக் கஷ்டமான நாட்களில் ஒருநாள் காலைவேளையில் ஜானியிடம் சொன்னேன், ‘உன்னிடமிருந்து இன்னொரு உதவி. பசந்த் லேனில் ஒரு பெண்ணுக்கு ஒரு செய்தி கொண்டுபோக வேண்டும். என் டியூஷன் கணக்கை செட்டில் செய்ய வேண்டும் என்று சொல். நான் என்னை அத்தையோடு சண்டை போட்டுக் கொண்டேன், அதனால் ரயில்வே காலனிப் பக்கமாகத் திரும்பவும் போவது சங்கடமான விஷயம் என்று ஜானியிடம் சொல்லியிருந்தேன். அவனுடைய சிரமத்திற்காக, ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த அவன் சட்டையின் பையில் கொஞ்சம் பணத்தை வைத்தேன்.

‘நானோ ஒன்டிக்கட்டை, அவன் மறுத்தான், ‘இதை வைத்து என்ன செய்யப்போகிறேன்? நான் கண்டுகொள்ளவில்லை. முடிந்தவரை தானமாக எனக்கு எதுவும் வேண்டாம். அவன் கிளம்பிக்கொண்டிருந்தபோது, என்னிடம மிச்சமிருந்த பணத்தை ஒரு அண்டர்வேரில் சுற்றி, என் சூட்கேஸில் வைத்துப் பூட்டினேன்.

நாள் முழுவதும் அந்த அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி இருந்தேன். வெயில் உக்கிரமானபோது அறைச்சுவர்கள் தகிக்க ஆரம்பித்தன. நானே மெதுவாகச் சமைக்கப் படுவதுபோல இருந்தது. பின்மத்தியான நேரத்தில் தூங்கிவிட்டேன் போலும். நான் அணிந்திருந்த அரைச்சட்டை வியர்வையில் ஊறிப்போயிருக்க நான் கண் விழித்தபோது ஜானி இருட்டுக்குள் ஸ்டவ்வுக்குக் காற்றடித்துக்கொண்டிருந்தான். அவனது சுருக்கம் விழுந்த முகத்தில் நீலநிறச் சுவாலைகளின் வெளிச்சம் ஆடியது. குதிகால்களின் மீது   அமர்ந்திருந்த அவனது உடலின் சிறிய  மேற்பாகம் அவன் வேலை செய்தபோது வளைந்திருந்த தோற்றத்தைப் பார்த்தபோது எனக்கு அவன்மேல் பாசம் ஊற்றெடுத்தது. என் ஒரே விசுவாசமான நன்பன்.

‘உன் தோழியை இரயில்வே காலனியில் பார்த்தேன், அவன் சொன்னான், ‘அவள் என்னை உள்ளேயே விடவில்லை. இப்ப யாருக்கும் டியூஷன் தேவையில்லை என்று சொன்னாள்.

‘அவ எனக்குத் தரவேண்டிய பணம்? அவளோட தங்கை பெண்ணுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்ததற்கு?

‘அவளுக்குக் கோபம் வந்துடிச்சு. அவள் சொன்னாள்: ‘பாக்கியை எல்லாம் கொடுத்திட்டோம். அவனிடமிருப்பதை வச்சுக்க சொல்லுங்க. ஆனால் இனி வேறு வேலை எதுவும் இல்லை. பிறகு படீரென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.


யாரோ என்னை நெஞ்சில் நேருக்கு நேராகச் சுட்டது போல இருந்தது. அன்று இரவு படுக்கையில் ஜானி என்மேல் கையைப் போட்டபோது, அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டேன். அவன் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தான். பிறகு தன் வழக்கமான நிதானத்தோடு சொன்னான்: ‘உன்னோட எல்லாப் பிரச்சினைகளும் எனக்குத் தெரியாது முகேஷ். ஆனால், யாராவது உனக்கு அநியாயம் செஞ்சா, நீ விட்டுக் கொடுக்காம நிமிர்ந்து நிக்கணும்.

பல நாட்கள் காலை வேளைகளில் பசந்த் லேனில் ஒரு கறுப்புக் குடையால் முகத்தை மறைத்தபடி சுற்றிவந்தேன். சுற்றுச்சுவருக்கு மேலாக, உடைபட்ட வரிசைகளில் அமைந்த வீடுகளை நோட்டமிட்டேன். பலநாட்களின் சூரிய ஒளியால் சுவர்களில் அடிக்கப்பட்டிருந்த பிங்க் டிஸ்டம்பர் ஆங்காங்கே வெளிறிப்போயிருந்தது. புள்ளிபுள்ளியாக, சொறி பிடித்தது போன்ற தோற்றம்.

சரிகா இப்போது வீட்டைப் பூட்டுப்போட்டுப் பூட்டியிருப்பாள் என்று உறுதியாக நினைத்தேன். ஒவ்வொரு தளத்திலும் அடுத்தடுத்த இரண்டு வீடுகளுக்குப் பொதுவானதாக  வேலையாட்கள் உபயோகத்திற்கான ஒரு குறுகிய பால்கனி இருந்ததைப் பார்த்தேன். அது இடையில் ஒரு சுவரால் இரண்டாகத் தடுக்கப்பட்டிருந்தது. என் மனசுக்குள் ஒரு திட்டம் உருவானது.

திங்கள்கிழமை காலைகளில் சரிகா ஜிம்முக்கும், பியூட்டி பார்லருக்கும் போய்வருவாள் என்று எனக்குத் தெரியும். ஒருவேளை அந்த வாடிக்கை மாறியிருக்குமோ என்று பார்க்கக் காலனி கேட்டுக்கு வெளியில் குடையுடன் காத்திருந்தேன். இல்லை, மாறவில்லை. பிரதான சாலையில் டாக்ஸி ஸ்டாண்டை நோக்கி அவள் நடந்தபோது உடன் சென்றேன். பின்புறத்திலிருந்து அவளது மெல்லிய உருவமும்,  ஒரு டீ-ஷர்ட்டில் அவளது திமிறிய தோள்களும் என் உடலை உள்ளூர அப்படியே உருக வைத்ததன.

அடுத்த திங்கள்கிழமைக்குள் என் முன்னேற்பாடுகள் முடிந்தவிட்டன. ஒரு உறுதியான கயிறும், ஒரு கடப்பாரையும், ஒரு பட்டனகத்தியும் வாங்கிக்கொண்டேன். எல்லாவற்றையும் என் முதுகுப்பையில் எடுத்துக்கொண்டேன். ஒரு கால்-இன்ச் கத்தரியை வைத்து முடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டேன். ஜானி சொன்னான், நான் வித்தியாசமாக, உறுதியானவனாகத் தோன்றுவதாக. ஒட்ட ஷேவ் பண்ணிக்கொண்டு, கறுப்புக் கண்ணாடியும், சுத்தமான பாண்ட், சட்டை, ஷூக்களும் அணிந்துகொண்டேன். ‘விரைவில் உனக்குப் பாரமாக இருக்க மாட்டேன், என் நண்பனிடம் சொன்னேன். அவன் பாரம் என்று நான் சொன்னதை மறுக்கும் விதத்தில் தலையசைத்தான். ஆனால் எனக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும்.

பசந்த் லேனை நோக்கிக் கடைசிமுறையாக நடந்தேன். என் முதுகுப்பையைத் தோளில் போட்டவாறு காலனியின் காம்பவுண்டுக்குள் துணிச்சலுடன் நுழைந்தேன். கேட்டில் இருந்த காவலாளி ஸ்டைலாக சலாம் வைத்தான். சரிகாவின் வீடிருந்த கட்டடத்தில் இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறினேன்.

நான் எதிர்பார்த்த மாதிரியே அவள் வீட்டின் முன்கதவில் ஒரு பெரிய பூட்டு தொங்கியது. வேலையாட்களுக்கான கதவு உட்புறமாகத் தாழிட்டுப் பூட்டப் பட்டிருந்த்துபோல் தோன்றியது—பீபிஜி உள்ளே அடைபட்டிருக்கிறாள். ஆனால் அடுத்தவீட்டின் சர்வீஸ் வழி திறந்திருந்தது. அவர்கள் சட்டவிரோதமாக தங்கள் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார்கள்; அதனால் யாராவது அந்த வழியாக வந்துபோய்க்கொண்டு இருப்பார்கள். நான் அதன் வழியாக நுழைந்து வேலையாட்கள் பால்கனி வழியாக சரிகா வீட்டை நோக்கிச் சென்றேன். அது அமைதியாக இருந்தது. யாராவது என்னைப் பார்த்துவிட்டால், நான் மிஸ்டர் கன்னாவின் அண்ணன் பையன், சித்தி நான் வெளியில் சென்றிருக்கும்போது கதவைப் பூட்டிவிட்டுப் போய்விட்டாள் என்று சொல்லிவிடலாம்.

கைபிடிச்சுவரில் அபாயமான விதத்தில் தொங்கியவாறு தடுப்புச்சுவரைத் தாண்டி அந்தப்பக்கம் சென்றேன். என் நெற்றிப்பொட்டில் ஒரு நரம்பு துடித்தது. சரிகாவின் சமையலறைக்குப் போகும் கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. ஆனால் நானோ ஒரு காண்டிராக்டர் மகன்; இரயில்வே கட்டடங்கள் பற்றி எனக்குத் தெரியும். கீழ்ப்புறத் தாழ்ப்பாளை சில உதைகள் கொடுத்துத் திறந்துவிட்டேன். பிறகு கதவின் அடிப்பகுதியின் மேல் சாய்ந்து அழுத்தினேன். அது சில இன்ச்சுகள் விலகியது. அந்தப் பிளவுக்குள் கடப்பாரையைச் செருகி, மேற்புறத் தாழ்ப்பாளையும் நெம்பித் திறந்தேன்.

பீபிஜி கூடத்தில் தரையில் ஒடுங்கிக் கிடந்தாள். நான் அவளை கைகளைக் கட்டிப்போட்டு, வாயைச் சுற்றி ஒரு துணியைக் கட்டியபோது, அவள் விக்கிக் கமறினாள். மிச்சக் கயிற்றை நான் கத்தியால் வெட்டியபோது அவள் கண்கள் விரிந்தன. செத்துப்போன மாதிரிக் கீழே விழுந்தாள்.  அவளைத் தூக்கி அவளுடைய அறைக்குத் எடுத்துச் சென்றேன்.

ஒருமணி நேரம் வீட்டிலிருந்த ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்தேன்: ரெஃப்ரிஜிரேட்டர் காந்தங்கள், சாம்பல் கிண்ணங்கள், பொம்மை அலமாரி, மிஸ்டர் கன்னாவின் மேசையிலிருந்த இரகசியக் கோப்புகள். சரிகாவின் படுக்கையில் படுத்தேன். ஏனோ அது பழக்கமற்றதுபோல, விநோதமாகத் தோன்றியது. திறந்திருந்த அலமாரிகளில் பணம் இருக்கிறதா என்று பார்த்தேன். தலையணை உறைகளும், படுக்கை விரிப்புகளும் மட்டுமே இருந்தன.

முன்வாசல் கதவு திறந்துமூடிய ஓசை கேட்டது. பிறகு உள்புறம் தாளிடப்படும் க்ரீச் ஒலி கேட்டது. நான் மட்டும் இம்மாதிரி எச்சரிக்கையாக இருந்திருந்தால். நான் பீபிஜியின் அறையில் காத்திருந்தேன். அந்தக் கிழவி அவ்வப்போது முனகியபடி குப்புறப்படுத்திருந்தாள்.

பீபிஜி ஒரு ஆட்டுக்குட்டியைப் போலக் கட்டிப் போடப் பட்டிருப்பதைப் பார்த்து சரிகா ஒருமுறை அலறினாள். ஆனால் நான் அதற்குள் என் கத்தியை எடுத்துவிட்டேன். சரிகா புத்திசாலி. உடனே வாயை மூடிக்கொண்டாள். அவளை ஒரு நாற்காலியில் அமரவைத்து கைகளையும், கணுக்கால்களையும் கட்டிப்போட்டேன். அவள் ஒரு போலோ ஷர்ட்டும், லேசான ஜீன்ஸும், கேன்வாஸ் ஷூக்களும் அணிந்திருந்தாள். முடியைக் காதுக்குக் கீழே வெட்டியிருந்தாள். அது அவளது பையன் போன்ற தோற்றத்தை மேலும் அதிகமாக்கியது. அவள் கைகளில் புதிய நகப்பூச்சு வாசனை. அவள் இடது கண் துடித்தது. நான் தொட்டபோது சுருங்கினாள். ஆனாலும் அமைதியாகவே இருந்தாள்.

'நம்ம கணக்கைத் தீர்ப்பதற்காக வந்தேன், நெற்றிப்பொட்டுகள் தெறித்துக்கொண்டிருந்ததை மீறி நிதானமான குரலில் சொன்னேன்.

‘நெட்வொர்க் இப்ப இல்லை,முன்னாள் சாய்ந்து பதில் சொன்னாள். ‘உன் அழுமூஞ்சி நண்பனிடம் சொன்னேனே.

‘மிஸ்டர் கன்னா அதை மூடினாரா?முடிந்தவரை அமைதியாகக் கேட்டேன்.

‘நான்தான் செஞ்சேன், வெடுக்கென்று சொன்னாள். ‘அஷோக்குக்குப் பையன்களை மட்டும்தான் தெரியும். இன்னும் எல்லாப் பெண்களையும் தெரியாது.

‘வேறு பையன்களும் இருந்தார்களா?, யோசிக்காமல் வீறிட்டுவிட்டேன்.

அவள் முகத்தில் வெறுப்பு தோன்றிமறைந்தது. ‘ஐயோ பாவம், என்று அவளிருந்த அந்த நிலைமையிலும் சொன்னாள். ‘நீதான் எல்லோரிலும் மலிவானவன் முகேஷ்.

நான் துணுக்குற்றுக் கண்களை மூடிக்கொண்டேன். வலித்த தலையை முஷ்டிகளால் இருபுறமும் அழுத்திவிட்டுக்கொண்டேன். கையில் கத்தி இன்னும் இருந்தது. கண்களைத் திறந்து பார்த்தபோது சரிகா எழ முயன்று கொண்டிருந்தாள்.

‘அசையாதே!நான் கத்தினேன். அவளது அவமதிப்புகளை இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. ‘ஒரே தடவைதான் கேட்பேன். எங்கே பணம்?கத்தியை உயர்த்தினேன்.

‘பீரோவில் இரண்டாயிரம் இருக்கிறது. பீபிஜியை அவிழ்த்துவிடு, அதை எடுத்துத் தருகிறேன். திரும்ப எப்போதாவது வந்தாயோ, என் கணவர் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பார்.அவள் உதட்டுச் சுழிப்பில் தென்பட்டது பயமா, சிரிப்பா?

‘ஒளிந்துகொள்ள நான் ஒன்றும் திருடன் அல்ல. எனக்கு சேரவேண்டியதை வாங்கிப்போகவே வந்தேன், பிச்சை கேட்க அல்ல.

அடம்பிடிக்கும் குழந்தையைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்தாள். ‘பிறகு ஏன் கொள்ளைக்காரன் மாதிரி என்னை மிரட்டுகிறாய்? வைத்திருப்பவர்களிடம் போய்க் கேள்.

‘மிஸ்டர் கன்னாவா?

‘என் கணவருக்கு உன் பணம் ஒன்றும் தேவையில்லை,வெறுப்பாகக்கூறினாள். ‘உன் அழுமூஞ்சி நண்பனைச் சொன்னேன். அவனை ஏன் அனுப்பினாய் என்று தெரியவில்லை. ஆளைப் பார்த்தவுடனேயே நம்ப முடியாதவன் என்று தெரிந்துவிட்டது.

வயிற்றில் ஓங்கிக் குத்தப்பட்டது போல் இருந்தது.  கால்கள் தள்ளாடின. ‘ஏன் பொய் சொல்ற? என்று உறுமினேன்.


‘என்ன மாதிரி சகவாசம் வைத்திருக்கிறாய்? நான் கத்துக் கொடுத்தது எல்லாத்தையும் மறந்துட்டியே.’  நான் சொல்லச் சொல்லப் பொருட்படுத்தாமல் எழுந்துவிட்டாள். அவிழ்த்துவிடு என்று சொல்லாமல் சொல்கிற பாவனையில் கைகளை நீட்டினாள். அவள் எனக்கு உத்தரவிட ஆரம்பித்துவிட்டாள்; முதல்முறை அவள் வீட்டில் நாங்கள் சந்தித்தது முதல் கடைசி முறையாக என்னைப் பொலிகாளையாக அனுப்பிவைத்தது வரை எப்போதும் செய்துவந்தது போலவே.

வாயைப் பிளந்தபடி அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். என்னுடைய மிரட்டல்களை எளிதாகச் சமாளித்துவிடுவாள் என்று எனக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆட்டுவிக்கப்பட்டவனாக, தோல்வியை ஒப்புக்கொண்டு அவளது கட்டுகளை அறுத்துவிடக் கத்தியை உயர்த்தினேன். சரியாக அதே நேரம் முன்கதவு தட்டப்படும் துல்லிய ஒலி எங்கள் இருவரையும்மே தூக்கிவாரிப் போடச்செய்தது.

‘சரிகா, ஒரு பரிச்சையமான கரகரத்த குரல் கூப்பிட்டது. ‘கதவைத் திற. நீ தனியா இருக்கியா?

ஒரு கணம் காலம் பின்னோக்கிப் போனது போலத் தோன்றியது. ஒரு விநோதமான, கசப்பான உணர்வு.

‘நல்ல வேலை செஞ்சிருக்க முகேஷ், சரிகா சொன்னாள். ‘வரும் முன்னால் அவருக்குச் சொல்லிவிட்டு வந்தியா? ஆனால் அவளது துணிச்சல் தோரணையில் இப்போது ஒரு போலித்தனம் இருந்தது.

‘இந்நேரத்தில் எதுக்கு வந்திருக்கிறார்?மெல்லிய குரலில் கேட்டேன். கதவு தட்டப்படுவது இப்போது இடிக்கப்படுவதாக மாறியது. அறை தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தது.

‘அவர் தன் ஆளை வெளியே கண்காணிப்புக்கு வைத்திருந்திருக்கனும். நீ திட்டம் போட்டப்ப அதைப் பத்தி யோசிச்சியா?

இடிக்கப்படுவது விடாமல் தொடர்ந்தது. பீபிஜி முனகினாள். மிஸ்டர் கன்னா, கதவை உடைத்துவிடப்போவதாகவும், சரிகாவை எந்தத் தடுப்பும் காப்பாற்றாது என்றும் சப்தமாக மிரட்டிக்கொண்டிருந்நார். தாழ்ப்பாள் உறுதியாக இருந்தாலும், வெகுநேரம் அதனால் தாக்குப்பிடிக்க முடியாது.

‘நான் என்ன செய்ய?குடல் தொண்டைக்குவர நான் கேட்டேன். மீண்டும் நான் இப்போது முழுதுமாக அவள் கையில்.

மரமும் உலோகமும் உடைபடும் சப்தம் கேட்டது. பயப்படுவதற்குப் பதிலாக, சரிகா ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தாள். மெதுவாக, அவளது முகம் ஒரு விநோதமான திருப்தியைக் காட்டியது, அவள் தனது காதல் காயங்களைப் பார்வையிடும் வேளைகளில் இருப்பதுபோல. ‘என்னைக் கத்தியால் குத்து, அவள் கொஞ்சுவதுபோலக் கிசுகிசுப்பான குரலில் சொன்னாள்.

நம்ப முடியாமலும், பயத்துடனும் அவளைப் பார்த்தேன்.

‘வேறு வழியில்லை. அமைதியாகச் சொன்னாள். ‘ஞாபகம் இருக்கா, கயிறுகளால் அவரை நம்ப வைக்க முடியாது.

‘என்னால் அது முடியாது,வலிப்பு வந்தவனைப்போல நடுங்கியபடிச் சொன்னேன்.

‘செய், உத்தரவிட்டாள். ‘உம், உடனே.நான் அதுவரை பார்த்திராத உறையவைக்கும் புன்னகையைச் சிந்தினாள். ‘அதை இப்படிக் கொண்டுவா. நான் உதவுகிறேன்.

நான் பஹர்கஞ்சுக்கு மீண்டும் ஓடினேன். என் பின்னால் சப்தங்கள் கேட்கும், ஆட்கள் துரத்திக்கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், என் சட்டையிலிருந்த இரத்தக்கறையைப் பார்த்தபோது மக்கள் விலகிப்போனார்கள். சடைபிடித்த முடியும்,  கிழிந்த சட்டையும், லுங்கியும் அணிந்திருந்த வெளிநாட்டுக்காரன் ஒருவன். ‘மேன், ஆர் யு ஓகே? என்று கேட்டான். ஆனால் நான் அவனைத் தள்ளிக்கொண்டு சென்றேன். ஜானி வீட்டை அடைந்தபோது, என் சாமான்கள் அத்தனையும் வெளிவாசலில் கிடந்தன. என் துணிமணிகள் இருந்தாலும், சூட்கேசிலிருந்த பணத்தைக் காணோம். கதவில் இருந்த பூட்டு மாறியிருந்தது. முற்றம் பக்கமிருந்த ஒரு ஜன்னலில் இருந்த விரிசல் வழியாக உள்ளே பார்த்தேன். அறை காலியாக இருந்தது. ஒரு துவைத்த சட்டையை எடுத்துக்கொண்டேன். என் விரல்கள் இறுகிப்போயிருந்தன. பட்டன்களைக் கழற்றவும், போடவும் ஒரு யுகம் பிடித்தது.

என் மூட்டை முடிச்சுகளை விட்டுவிட்டு மயானத்திற்குச் சென்றேன். தொழிலாளிகள்  சிரித்தபடி, ஜானி சாஹேப் விடுமுறையில் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். வெயில் கொளுத்திய தெருவுக்கு வந்தேன். தலையை சாய்ப்பதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. இரவுக்கு இன்னும் வெகுநேரம் இருந்தது. ஒரு திறந்த சாக்கடை அருகே நின்று ஓங்கரித்தேன். சரிகா கடைசியில் எனக்கு உதவத் தேவையிருக்கவில்லை; அவளது பக்கவாட்டுப் பகுதியில் கத்தி சிரமமின்றி நழுவிச்சென்றது. ‘சொர்க்கம் போல இருக்கு,அவள் சொன்னாள். அவளது சிவந்த முகம் வலியில் முறுக்கிக்கொண்டது. இசகுபிசகாக சுற்றிச் சுழன்றபடி  முழங்கால்களை ஊன்றியும், பின்பு கைகளை ஊன்றியும் விழுந்தாள். ‘ஃபர்ஸ்ட் கிளாஸ், என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடினாள். எனக்கும் அது ஆனந்தமாக இருந்தது என்று அவளுக்குத் தெரியுமா? இரத்தம் தோய்ந்த கத்தியைக் கையில் ஏந்தியபடி நான் கூடத்தில் மிஸ்டர் கன்னாவைக் கடந்துபோகும்போது அவர் முகம் பேயறைந்தது போல இருந்தது.

பஹர்கஞ்சின் சந்துபொந்துகளில் மணிக்கணக்கில் சுற்றித்திரிந்தேன். நியூ டெல்லி ஸ்டேஷன் பக்கமாகப் போய்ப்பார்த்தேன். ஆனால் அங்கு நிறையப் போலீஸ் கார்கள் இருந்தன. கடைசியில் இருட்டியது.  ஓடவேண்டும் என்று தெரியும், ஆனாலும் நான் ஓய்வெடுக்கவேண்டியிருந்தது. மயானத்தின் வெளிச்சுவரைச் சுற்றிப்பார்த்துத் தாண்டிக் குதிக்கக்கூடிய ஓரிடத்தைக் கண்டுபிடித்தேன். சிரமப்பட்டு சுவரில் ஏறி உள்ளே குதித்தேன். புதிதாகத் தோண்டிய ஒரு சவக்குழியைக் கண்டுபிடித்து அதற்குள் ஊர்ந்து சென்றேன். உள்ளே மல்லாந்து படுத்தபோது முதுகில் மண்தரையின் குளிர்ச்சி. அப்படியே கருநீல வானத்தைப் பார்த்தபடி விடியலின் இரக்கமற்ற கதிர்களுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன்.

*****************************************
Delhi Noir, edited by Hirsh Sawhney, published by Akashic Books.

ஆங்கில வடிவில் படிக்க


Disclaimer: பரவலான தமிழ் வாசகர்களைக் கதை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இங்கு வெளியிடப்படுகிறது. ஆசிரியர் அல்லது பதிப்புரிமை பெற்றிருப்பவர்கள் ஆட்சேபித்தால் நீக்கப்படும்.