Monday 17 August 2009

கங்கை நீர் செய்த அற்புதங்கள்: டாக்டர் ஆபிரஹாம் கோவூர்::பகுதி 2


நோய்தீர்த்த அற்புதங்கள்


அந்த இரு “தீர்த்த”ப்புட்டிகளையும் வைதீகமான கிறித்துவரான எங்கள் தாயாரிடம் ஒப்படைப்போம். அவர் பெருமையோடும் உவப்போடும் “தீர்த்தத்தை” எங்கள் அண்டையிலுள்ள “நாயர்”களுக்கு அவர்களது தேவைக்கேற்ப விநியோகம் செய்வார். எங்கள் பாசமிகு அன்னை 1942 ல் மரணிக்கும்வரை அவருக்குத் “தீர்த்தம்” பற்றிய உண்மை சொல்லப்படவில்லை. ஒவ்வொரு முறை நாங்கள் வீட்டுக்கு வரும்போதும் முதல் இரு நாட்களுக்கு எங்கள் அண்டை அயலவர் எங்களைப் பார்த்துவிட்டு அப்படியே தங்கள் பங்கு புனித நீரைப் பெற்றுச் செல்வதற்காக எங்கள் வீட்டுக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.

அடுத்த கோடையிலும் இந்த எத்துவேலை அரங்கேறும். இவ்வாறு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் எங்கள் கிறித்தவ அன்னையாரையும், இந்து அக்கம்பக்கத்தாரையும் கோட்டக்கரா இரயில்வே நிலையத் தண்ணீரைக்கொடுத்து ஏமாற்றிவந்தோம். அதோடு ஒவ்வொரு விடுமுறையின்போதும் போன வருட விநியோகம் ஆற்றிய அற்புத நிவாரணங்களைக் குறித்த எண்ணற்ற கதைகளையும் நாங்கள் பொறுமையாகக் கேட்க வேண்டியிருந்தது.

புதூர் ராமன் நாயர் இப்படிச் சொன்னார்: “இரண்டு ஆண்டுகளாக மருத்துவரிடம் போகவேண்டிய தேவையே ஏற்படவில்லை. போன ஏப்ரலில் என் அம்மாவுக்கு அதிகமான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. நான் சும்மா ஒரு கரண்டி தேனில் இரண்டு சொட்டு “தீர்த்தம்” விட்டுக் கொடுத்தேன். அவ்வளவுதான். மூன்றே மணி நேரத்தில் அவர் உடம்பு முற்றிலும் சரியாகிவிட்டது.”

கிளன்னப்பரம்பில் லஷ்மி அம்மாள் சொன்னார், “என் மகளுக்கு எப்பொழுது சளி அல்லது காய்ச்சல் கண்டாலும் ஒரே ஒரு சொட்டு “தீர்த்தத்தில்” எல்லாம் போய்விடும். மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதிலிருந்து கடுமையான தலைநோவை அனுபவித்து வந்தேன். இப்பொழுதோ தலைநோவு வரப்போகிற மாதிரித் தெரிந்தாலே ஒரு சொட்டு “தீர்த்தத்தை” நெற்றியில் தடவிக்கொள்கிறேன். அதோடு வேதனை தீர்ந்தது. அப்படியே அது வந்தாலும் வலி மிகவும் குறைவே.”

வெட்டவேலில் பாருக்குட்டிக்கு முதல் இரு பிரசவங்களும் சிக்கலாகவும் கஷ்டமாகவும் இருந்தன. மூன்றாவது பிரசவம் எளிதாக முடிந்தது. பிரசவ வலி ஏற்பட்ட உடனே இரண்டு சொட்டுத் “தீர்த்தம்” எடுத்துக்கொண்டதுதான் அவள் செய்தது.

ஒளிப்பிரக்கட்டு நாராயண குருப்பு “தீர்த்தத்தின்” மகிமையை ஆய்வு செய்து நிரூபித்தார். அவரது தோட்டத்தில் இரு ஒட்டு மாங்கன்றுகள் இருந்தன. இரண்டும் அளவிலும் வயதிலும் ஒத்தவை. வறட்சிக்காலத்தில் இரண்டுக்கும் தண்ணீர் ஊற்றினார். ஒரு தடவை ஒரு மரத்துக்கு ஊற்றிய தண்ணீரில் இரண்டு சொட்டுகள் “தீர்த்தம்” கலந்தாராம். பூக்கும் பருவம் வந்தபோது “தீர்த்தம்” கொடுக்கப்பட்ட மரம் பூப்பூக்க, இன்னொரு மரமோ வெறும் இலைகளை மட்டுமே ஈன்றது.

சங்கரோத் பட்சு பிள்ளை ஒரு கரண்டி “தீர்த்தத்தை” வீட்டுக்கிணற்றில் ஊற்றி, குடும்பத்திலிருந்த அனைவருக்கும் நோய்த்தடுப்பு கொடுத்துவிட்டார். இப்படிச்செய்ததில் இருந்து அவ்வீட்டில் யாரும் நோய்வாய்ப் படவில்லை.

இதுபோல மேலும் ஏராளமான கதைகளை இன்னும் கொஞ்சம் தீர்த்தம் கேட்டுவந்த அக்கம் பக்கத்தினர் விவரித்தார்கள்.

விளக்கம்

புனித நீரின் அற்புத சக்திகள் பற்றிய நம்பிக்கை மிகவும் புராதனமானது. பலதரப்பட்ட மனிதர்களும் புனிதமான, தெய்வீகமான பொருட்கள், மனிதர்கள், இடங்கள், நேரங்கள் போன்றவற்றில் மூட நம்பிக்கை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அவை அவர்களது மனதில் ஏற்படுத்தும் உளரீதியான விளைவு தவிர அந்த நம்பிக்கைகள் உண்மையென ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்று சுத்தமாக எதுவும் இல்லை. உளரீதியான தூண்டுதல்களால் நல்ல விளைவுகள் ஏற்படுவது போன்று இத்தகைய நம்பிக்கைகளால் தீய விளைவுகளும் ஏற்படக்கூடும். மனநல மருத்துவமனைகளில் நியூரோசிஸ் வியாதிகளுக்காகச் சிகிச்சை பெறுவோரில் பலர் மூட நம்பிக்கைகளின் இறுதி விளைவுகளே. புனிதத்தை நம்புபவன் நிச்சயம் நிந்தனையால் அவதிப்படவும் செய்வான். உளவியல் கூறுவதன்படி, இப்படியான மனவேதனைகள் எளிதில் எதையும் நம்பிவிடக்கூடிய, மனவலிமை குன்றியவர்களிடம் நியூராட்டிக் வியாதிகளை ஏற்படுத்துகின்றன. என்னிடம் கொண்டுவரப்படும் ஏராளமான நியூராட்டிக் நோயாளிகளின் புள்ளிவிவரப்படி நான் கண்டது என்னவென்றால், ஒரு சமூகத்தில் எந்த அளவுக்கு மூட நம்பிக்கைகள் நிலவுகின்றனவோ அந்த அளவுக்கு அச்சமூகத்தில் நியூராட்டிக் வியாதிகளின் தாக்கமும் அதிகம் காணப்படுகிறது. இதே காரணத்தால், இத்தகைய சமூகங்களிலும்கூட பெண்களே அதிகம் பீடிக்கப்படுகிறார்கள். பெண்கல்வி, பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துவைப்பதைத் தளர்த்துவது ஆகியவற்றால் பெண்களிடையே நியூரோசிஸ் பாதிப்பைப் பெரிதும் குறைக்க முடியும்.

தற்போது கல்வித்துறையில் துணை இயக்குனராக உள்ள ஒருவர், யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் நான் ஆசிரியராக இருந்தபோது உடன் பணியாற்றினார். அவர் ஒருநாள் ஆசிரியர்கள் அறையிலிருந்த கூஜாவிலிருந்து சிறிது தண்ணீர் அருந்தினார். சில மணி நேரம் கழித்து, மற்றொரு ஆசிரியர் அந்தக் கூஜாவில் எஞ்சியிருந்த தண்ணீரை ஒரு கண்ணாடித் தம்ளரில் ஊற்றினார். அப்பொழுது ஒரு சிறிய செத்த பாம்பும் தண்ணீரோடு சேர்ந்து வெளியில் வந்தது. இதைக் கேள்விப்பட்டதும் அந்த இயக்குனருக்குக் கடும் குமட்டல் ஏற்பட்டது. குமட்டல் தொடர்ந்தபடியே இருந்ததால் நாங்கள் அச்சமடைந்தோம். கடைசியில், அவர் தண்ணீர் குடித்தது அதே மேஜையிலிருந்த வேறு ஒரு கூஜாவிலிருந்துதான் என்று அவரை நம்ப வைத்ததும் குமட்டல் நின்றுவிட்டது. அவரும் அதே கூஜாவிலிருந்துதான் தண்ணீர் குடித்திருந்தார் என்றபோதிலும் வேறு ஒன்று என அவரை குருட்டுத்தனமாக நம்ப வைத்ததும் அவரது குமட்டல் தொந்தரவு சரியாய்ப்போனது. இதிலிருந்து, மன ரீதியான காரணங்களால் ஒருவர் நோய்வாய்ப்படவும், மீளவும் முடியும் என்பது விளங்குகிறது. ஆயினும் மனதோடு சம்பந்தப்படாத வியாதிகளை நம்பிக்கையால் குணப்படுத்த முடியுமென்பது அபத்தமே.

கோட்டக்கரா இரயில் நிலையத் தண்ணீர் உண்மையில் எந்த அற்புதத்தையும் எங்கள் ஊரில் நிகழ்த்திவிடவில்லை. எங்கள் அக்கம் பக்கத்தினர் கூறிய சம்பவங்கள் அவர்களது வெகுளித்தனத்தையே காட்டுகின்றன. அவர்கள் குழந்தைப்பிராயத்திலிருந்து “தீர்த்தத்தின்” மகத்துவங்களைப் பற்றி மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தார்கள். தர்க்கரீதியான காரண காரியங்களை விட்டுவிட்டு, அவர்களது உருவேற்றப்பட்ட மனம் அவர்களது குருட்டு நம்பிக்கைக்கேற்ப விளக்கங்களைக் கற்பித்துக் கொண்டது.

பலிகொடுத்தல், காணிக்கைகள், பிரார்த்தனைகள், நல்லாசிகள், வழிபாடுகள், விரதங்கள், ஒப்புக்கொடுத்தல், முடிசூடல், லூர்தின் தண்ணீர், “தீர்த்தம்”, “பிரசாதம்”, சடங்குகள், திருநீறு பூசுவது, “யாங்”, “பூஜை” முதலியவை தருவதாகச் சொல்லப்படும் விளைவுகள் வெளி எதார்த்தத்தோடு தொடர்பற்ற தன்வயமான அனுபவங்களே. அதேபோல சாபம், வசியம், பில்லி சூனியம், துர்சகுனம், கெட்ட வேளை, ஜாதகப்படி நேரம் சரியில்லை என்பன மதிகெட்டவர்களை மட்டுமே பாதிக்கும்.

பள்ளிக்கல்வியும் புத்திசாதுர்யமும் ஏமாளித்தனத்தை மாற்றிவிடுதாகக் கொள்ள முடியாது. சொல்லப்போனால், அதிகமாகப் படித்து உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட இவ்விஷயத்தில் ஏமாளிகளாகவும், சூனியத்தை நாடுபவர்களாகவும் கூட இருக்கிறார்கள். பகுத்தறிவு பூர்வமாகச் சிந்திக்க முடிந்தவர்களால் மட்டுமே ஏமாறாமல் தப்பிக்க முடியும். குருட்டு நம்பிக்கையாளர்கள் பொதுவாக புத்திசாதுர்யத்தையும், கல்வியையும் மீறிக் குருடாக இருப்பவர்களே.

மொழிபெயர்ப்பு: சரவணன்

முதல் பகுதியை வாசிக்க இங்கு சொடுக்குக.

Copyright © 1976 by Dr Abraham. T.Kovoor
from " BEGONE GODMEN " published by Shri Aswin J.Shah
JAICO PUBLISHING HOUSE - Bombay - India

Sunday 16 August 2009

கங்கை நீர் செய்த அற்புதங்கள்: டாக்டர் ஆபிரஹாம் கோவூர்





என் தாய்மண்ணான கேரளா, இயற்கை அமைப்பு, பருவநிலை, விலங்கின, தாவர வகைகள் ஆகியவற்றில் மட்டுமல்லாது, மக்களின் இன, பண்பாட்டுக் கூறுகளிலும் ஸ்ரீ லங்காவை மிகவும் ஒத்தது எனலாம். ஸ்ரீ லங்காவில் இருப்பது போன்றே பேயோட்டுதல், வெறியாட்டம் ஆகியவை இன்றும் கேரள கிராமவாசிகளிடையே மிகப் பிரபலம். அரை நூற்றாண்டுக்கு முன்பு, நான் சிறுவனாயிருந்தபொழுது, வீட்டில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால் உடனே பேயோட்டுவது வழக்கம். பல வீடுகளில் ஏதாவது “புனித” மருந்தோ, தாயத்தோ வைத்திருப்பார்கள். அது தங்களுடைய சகல பிணிகளையும் போக்கிவிடும் என்பது அவர்களுடைய ஐதீகம்.

“நாயர்”களைப்பொருத்தவரை அது புனித நகரான காசியிலிருந்து வருபவர்கள் கொண்டுவரும் கங்கை நீர். சிரியன் கிறிஸ்தவர்களுக்கு அன்டியோக்கிலிருந்து வருகிற ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெய் அல்லது லூர்திலிருந்து வருகிற “தீர்த்தம்”. இஸ்லாமியருக்கோ ஹஜ் யாத்ரீகர்கள் கொண்டுவருகிற, மெக்காவில் “புனித” காபா கல்லைத்தொட்டு மகிமைப்படுத்தப்பட்ட கலயத்தில் கொண்டுவரப்படும் தண்ணீர்.

1921 முதல் 1924 வரை, அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும், என் தம்பியுமான காலஞ்சென்ற டாக்டர் பேஹனன் கோவூரும் நானும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களாக இருந்தோம். என் சொந்த ஊரான திருவல்லாவிலிருந்து கல்கத்தா நகரம் 1500 மைல் தொலைவில் இருக்கிறது. இரயிலில் கல்கத்தா செல்ல சுமார் ஐந்து நாட்கள் பிடிக்கும்.

இரண்டு இளஞ்சிறுவர்கள் திருவல்லாவிலிருந்து தூர தேசமான கங்கைக் கரையில் அமைந்திட்ட கல்கத்தா சென்று படிப்பதென்பது அன்று எங்கள் சுற்றுவட்டாரத்தில் அபூர்வமான விஷயமாக இருந்தது. நீண்ட தொலைவு மற்றும் அதிகமான செலவு பிடிக்கும் காரணத்தால் நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறையே கோடை விடுமுறையில் வீட்டுக்கு வருவது வழக்கம்.

வழியனுப்பும் படலம்

நாங்கள் விடுமுறை முடிந்து கல்கத்தா செல்வது ஒரு விஷேசமான நிகழ்ச்சியாக இருக்கும். புறப்படுவதற்குப் பலநாட்கள் முன்பே எனக்கும் என் தம்பிக்கும் அண்டை அயலார் விருந்து வைப்பார்கள். விடுமுறையின் கடைசி சில தினங்களில் அனேகமாக மூன்றுவேளை சாப்பாடும் ஏதாவது பக்கத்து வீட்டில்தான் நடக்கும். இதில் சாதி, மத, வர்க்க வேறுபாடுகள் இருக்கவில்லை. எல்லா “நாயர்” குடும்பத்தவருமே நாங்கள் அடுத்தமுறை வரும்போது சில துளிகளாவது “தீர்த்தம்” (கங்கை நீர்) கொண்டுவர வேண்டுமென்று விரும்பினர். அவர்களைப் பொருத்தவரை நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்; அந்த இளம் வயதிலேயே “தெய்வீகமான” கங்கையில் “புனித” நீராடி, பெரும் பிரயத்தனமின்றியே சொர்க்கத்துக்குச் செல்லும் பாக்கியம் பெற்றிருந்தோமே.

புறப்படும் நாளில் எங்கள் வீட்டு முற்றம் அக்கம் பக்கத்து ஆண்கள், பெண்கள், குழந்தைகளால் நிறைந்துவிடும். ஆண்கள் பெரும்பாலும் குடியானவர்கள் அல்லது சிறு நிழக்கிழார்கள். அவர்கள் எங்களை வழியனுப்பும் பொருட்டு அன்றைய தினம் வேலைக்கே செல்ல மாட்டார்கள்.

என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் ரெவரண்ட் கே.பி.தாமஸ் பிரார்த்தனை நடத்தி எங்களை ஆசீர்வதிப்பார். பின்னர் எங்கள் தாயார் நாங்கள் ஊரிலுள்ள பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெறச் சொல்வார். அப்பெரியவர்களும், கண்ணீர் மாலையாகப் பெருக எங்கள் தலையில் கையைவைத்து ஆசீர்வதிப்பார்கள். பெண்கள் பலர் வீரிட்டு அழுதுவிடுவார்கள். எங்கள் பிஞ்சு மனதை அந்த அழுகைகள் பாதித்து எங்களையும் அழ வைத்துவிடும். அந்தப் பிரிவுத்துயர் எங்கள் பயணம் முழுவதிலும் மனதில் நிற்கும். நல்லகாலமாக, கல்கத்தா போனதும் அப் பெருநகரின் பலதரப்பட்ட கவர்ச்சிகளும், உற்சாகம் கரைபுரளும் விடுதி வாழ்க்கையும் எங்களை வீட்டையும், அண்டை அயலையும் மறக்கச் செய்துவிடும். அடுத்த கோடை காலம் நெருங்கும்பொழுதுதான் அவையெல்லாம் மீண்டும் நினைவுக்கு வரும்.

கங்கை

“புனிதமான” கைலாயத்தில் உற்பத்தியாகிற கங்கை 1500 மைல்கள் கங்கைச் சமவெளியில் ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கோடையில் இமயமலையின் பனி உருகுவதால் கங்கையில் வெள்ளம் பெருக்கெடுக்கும். வேகமாகப் பாய்ந்து செல்வதால் அதன் தண்ணீர் எப்போதும் கலங்கியே இருக்கும். கல்கத்தாவில் நான் வாழ்ந்த நீண்ட காலத்தில் ஒருமுறை மட்டுமே அதில் குளித்திருக்கிறேன். எனக்கு அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் அனுபவத்தால் அதுவே முதலும் கடைசியுமான முழுக்காடு ஆனது. நெடுநேரம் நீரில் மூழ்கிவிட்டு நான் தலையைத் தூக்கியபோது என் தலையில் வெள்ளைநிறம் கொண்ட ஏதோ ஒரு வஸ்து இடித்தது. அது வேறொன்றுமில்லை; மீன்களால் பாதி கடிக்கப்பட்ட, அழுகிப்போன மனிதக் கை. எனக்குக் குமட்டியது. இரண்டு நாட்கள் வரை சாப்பாடே இறங்கவில்லை.

அக்காலத்தில் இறந்தவர் உடல்களை கங்கையின் “புனித” நீரில் விட்டுவிடுவது வடநாட்டு இந்துக்களின் வழக்கம். இப்பொழுது தடை செய்யப்பட்டிருக்கும் இவ்வழக்கம், இறந்தவருக்கு மோட்சத்தைக் கொடுக்க வல்லது என நம்பப்பட்டது. கங்கையிலிருந்து நெடுந்தொலைவில் வசிப்பவர்கள், உடலை எரித்த சாம்பலைக் கரைப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்வார்கள். அரை நூற்றாண்டுக்கு முன்புவரை, எந்நேரமும் சில பிணங்கள் அழுகிய நிலையில் கங்கையில் மிதப்பதைக் காணலாம். அந்தப் பெரிய ஆற்றின் கரையேரமாக அமைந்திருந்த நூற்றுக்கணக்கான நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சடலங்கள் தினமும் அப் புனிதமென நம்பப்பட்ட ஆற்றுக்குள்ளே வீசப்பட்டன. ஆனாலும் தினசரி இந்தியா முழுவதிலிருந்தும் வருகிற இலட்சோபலட்சம் பேர் அதில் நீராடியதோடு, அந்த மாசு நிறைந்த தண்ணீரைக் குடிக்கவும் செய்து தங்களைத் “தூய்மை”ப்படுத்திக்கொண்டனர். அவர்கள் தங்களை நோக்கிவரும் சவங்களை ஒதுக்கிவிட்டுத் தொடர்ந்து நீராடுவதை நானே கண்டிருக்கிறேன். அழுகும் பிரேதங்கள் மிதந்து வந்தபோதிலும் கங்கை நீர் “தூய்மையும், தெய்வீகமும்” நிரம்பியது என நம்பும்படி அம்மக்கள் சிறுவயது முதல் மூளைச்சலவை செய்யப்யப்பட்டிருந்தார்கள்.

அந்தப் “புனித” நதியில் எனக்கேற்பட்ட அருவருப்பான அனுபவத்தால் நல்லவர்களான எங்கள் அண்டை அயலாருக்கு அதிலிருந்து சொட்டுத் தண்ணீர் கூடக் கொண்டு செல்லக்கூடாதென்று முடிவு செய்தேன். பேஹனனும் நானும் அவர்களை ஏமாற்ற விரும்பாததால் கங்கை நீருக்குப்பதில் ஏதேனும் நல்ல கிணற்று நீரைக் கொடுத்துவிடுவதென முடிவு செய்தோம்.

அந்நாளில் திருவல்லாவுக்கு அருகிலிருந்த இரயில் நிலையம் கோட்டக்கரா ஆகும். கோட்டக்கராவில் இரயிலை விட்டு இறங்கியதும் நிலைய காத்திருப்பறை ஃபில்டரில் இரண்டு புட்டிகள் நிறைய நீரை நிரப்பிக்கொள்வோம். அவற்றைக் கவனமாகக் கார்க் வைத்து அடைத்து எங்கள் மூட்டை முடிச்சுகளோடு வைத்துக்கொள்வோம். அப்பொழுதிருந்து அந்த இரு புட்டிகளில் இருந்த தண்ணீர் “தீர்த்தம்” என அழைக்கப்படும்.

திருவல்லாவை அடைய நாங்கள் 36 மைல்கள் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். பல நிறுவனங்களால் இயக்கப்பட்ட நிறையப் பேருந்துகள் அத்தடத்தில் ஓடின. அவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இது பயணிகளுக்குப் பெரிய நண்மையாக இருந்தது; அவர்கள் மிகுந்த மரியாதையும் கவனிப்பும் பெற்றார்கள். அக்காலத்தில் பேருந்துப் போக்குவரத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு எதுவுமில்லை. அவை நினைத்த நேரங்களுக்கு வரும், போகும்; எந்த வழியில் வேண்டுமானாலும் ஓடும்; யார் எங்கு இறங்க வேண்டுமென்றாலும் நிற்கும்; நடத்துபவர்கள் நினைத்தால் போக்குவரத்து ரத்து செய்யவும் படும்.

கோட்டக்கரா இரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் மூட்டை முடிச்சுகளை வாங்கித் தத்தமது பேருந்துகளின் மேற்கூரையில் போட்டுக்கொள்வதற்கு, நடத்துனர்களும், க்ளீனர்களும் போட்டாபோட்டி போடுவார்கள். மூட்டை முடிச்சுகளைப் பிடுங்கிப் பேருந்தின் மேலே போட்டுவிட்டால் அவற்றின் உரிமையாளர் வேறு வழியில்லாமல் அதே பேருந்தில் வர வேண்டியிருக்கும்.

நடத்துனர்களும் க்ளீனர்களும் எங்கள் மூட்டை முடிச்சுகளை முரட்டுத்தனமாக இழுக்கும்பொழுது “தீர்த்த” சீசாக்களை கவனமாகக் கையாளும்படி அவர்களை நாங்கள் வேண்டுவோம். அவ்வளவுதான். “தீர்த்தம்” என்கிற வார்த்தை மந்திரச்சொல் போலச் செயல்படும். அந்த இரண்டு சீசாக்களையும் பயபக்தியோடு வாங்கிக்கொண்டு, எங்களையும் ஓட்டுனர் அருகில் சிறப்பான இடத்தில் அமர வைப்பார்கள். கடைசியில் திருவல்லாவை அடைந்ததும், பேருந்து வழக்கமான பாதையிலிருந்து விலகி, புளி மூட்டையாக அடைந்திருக்கும் பயணிகள் சகிதமாகச் சுமார் இரண்டு மைல் தூரம் அதிகப்படியாகப் பயணித்து எங்களைக் கோவூர் இல்லத்தில் இறக்கிவிடும். எங்களையும் எங்கள் சாமான்களையும் வீட்டில் விட்டபின்னர், நடத்துனர் ஒரு சிறு குப்பியை வெளியில் எடுத்துக்கொண்டு, ஓட்டுனரும், க்ளீனரும், தானும் பகிர்ந்துகொள்வதற்காக சிறிது “தீர்த்தம்” தருமாறு வேண்டிக் கேட்டுக்கொள்வார்.

நோய்தீர்த்த அற்புதங்கள்

தொடரும்...

Copyright © 1976 by Dr Abraham. T.Kovoor
from " BEGONE GODMEN " published by Shri Aswin J.Shah
JAICO PUBLISHING HOUSE - Bombay - India

Wednesday 12 August 2009

கிச்சடி 12 ஆகஸ்ட் 2009

கதம்பமாகச் சில விஷயங்களை எழுதுவது இப்போது வலையுலகத்தில் பானியாக இருக்கிறது. நானும் அதுபோல முயல்கிறேன்! இதற்கு சாப்பாட்டு ஐட்டத்தின் பெயர் வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. பஞ்சாமிர்தம் தொடங்கிப் பொரிகடலை வரை ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டுவிட எனக்கு மிஞ்சியிருப்பது கிச்சடி!

***************
இடைத்தேர்தல் களைகட்டியுள்ளது. சமீப காலமாக எல்லாத் தேர்தலிலும் எல்லோரும் பேசுகிற விஷயம் பணப் பட்டுவாடா. எனக்குத்தெரிந்தவரை லோக்சபா தேர்தலில் மதுரையில் பண விநியோகம் நடந்தது உண்மையே. எங்கள் வீட்டிற்கும் வந்து, "நாலு ஓட்டுதானே சார்" என்று கேட்டு நான்கு காகித உறைகள் நீட்டப்பட்டன. "சும்மா அண்ணன் குடுத்திருக்காரு, வாங்கிக்கங்க" என்று விளக்கம். வாங்க மறுத்துத் திருப்பி அனுப்பினோம். தேர்தல் முடிந்த பிறகு பெண்களுக்கு மட்டும் சேலை விநியோகமும் நடந்தது. படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட ஏன் பணத்தை விடுவதில்லை என்பது பு.த.செ.வி. சமாச்சாரம். இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாததால் பணம் கொடுக்காமல் விட்டு, எதிர்பார்த்த மக்கள் ஏமாந்து, கோபத்தில் தே.மு.தி.க –வுக்கு ஓட்டுப் போட்டுவிடுவார்களா என்பதெல்லாம் 21 ஆம் தேதி தெரிந்துவிடும்.

*****************
இணையமெல்லாம் வருவதற்கு முன் நானே என் சொந்த முயற்சியால் சிம்மக்கல் நூல் நிலையத்தில் கண்டுபிடித்த ஒரு நல்ல எழுத்தாளர் எட் மெக்பெய்ன். நம்ம ஊர் சுஜாதாவின் சமகாலத்தைச் சேர்ந்த அமெரிக்க துப்பறியும் எழுத்தாளர். நியூ யார்க் நகரத்தின் 87 வது பேட்டைதான் இவரது முக்கால்வாசிக் கதைகளின் களன். அந்தப் பேட்டை போலீஸ் நிலையத்தைவைத்து போலீஸ் நடைமுறைகளை அசத்தலாக எழுதுவார். போலீஸ்காரர்களின் துணிச்சல், பயம், வெற்றி, தோல்வி, போட்டி, நட்பு என எல்லாமே கொலைக்கதையின் ஊடாக நம் கண் முன்னால் விரியும். 87 வது பேட்டை போலீஸ்காரர்கள் மாமூல் வாங்கியதாகத் தெரியவில்லை : -) நான் கடைசியாகப்படித்த மெக்பெய்ன் நாவல் பற்றி அடுத்த கிச்சடியில் சொல்கிறேன்.

****************
இப்பொழுது ஒரு ஆங்கில – தமிழ் அகராதியை காப்பி எடிட்டிங் செய்துவருகிறேன். (காப்பி எடிட்டிங் - தமிழில் இதற்கு இணையான சொல் கிடையாது; காரணம் தமிழ்கூறு நல்லுலகில் புத்தகங்கள் காப்பி எடிட்டிங்கெல்லாம் செய்யப்படுவதில்லை!) சுருக்கமாகச் சொன்னால் மேலே உள்ள பத்தியில் 87 வது என்று ஓரிடத்திலும் 87 ஆவது என்று வேறோர் இடத்திலும் எழுதாமல் கவனித்துக்கொள்வதே காப்பி எடிட்டிங் எனலாம்.

காபிக்கு இரண்டு வித ஸ்பெல்லிங் போடுகிறார்கள். பீட்ஸாவுக்கு நாலு! பிசா, பீசா, பிஸா, பிஸ்ஸா என்பதாக. (எதுவும் பீட்ஸா என்று இல்லை) தமிழ் வார்த்தைகளே மாற்றி மாற்றி (கருப்பு- கறுப்பு) எழுதப்படும் சூழலில் இது சாதாரணமே. ஆங்கிலத்தில் தலையனை அளவில் ஸ்டைல் மேனுவல்கள் உள்ளன. தமிழில் அடையாளம் மற்றும் இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவணம் இணைந்து வெளியிட்ட தமிழ் நடைக் கையேடு ஒரு நல்ல ஆரம்பம். வார்த்தைகளைச் சேர்த்து எழுதுவதா பிரித்து எழுதுவதா (மேல்+கூரை என்பதை மேற்கூரை என்று சேர்த்து எழுதுங்கள்; ஆனால் பொன் + தகடு என்பதைப் பொற்றகடு ஆக்க வேண்டாமாம்), ஒற்று மிகும்- மிகா இடங்கள் எல்லாவற்றையும் பட்டியல் போட்டுத் தருகிறார்கள். பதிவர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய இந்தப் புத்தகம் தியாகராய நகர் நியு புக் லேண்டில் கிடைக்கும்.

***************
சுஜாதா எழுதிய பாலசந்தர் மகள் கல்யாணம் பற்றிய பதிவில் (இது வேற பதிவு!) கடைசிப்பகுதி:

பக்கத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவருடன் சம்பாஷணைகள்:
அவர்- இடது பக்கம் எதுத்தாப்பல பச்சைப்புடவை உடுத்தியிருக்காங்களே, சீதா தானே?
நான்- ஆமாங்க (சீதா யார்?) வலப்பக்கத்தில் நீலமா சட்டை போட்டுக்கிட்டு ஸ்டைலா அது யாருங்க?
அவர்- அது எம் பொண்ணுங்க. ஆமா, நீங்க யாருங்க?
நான்- நான் வந்து சுஜாதாங்க...
அவர்- ஓ அப்படியா? ரொம்ப சந்தோஷம். 'அவள் ஒரு தொடர்கதை'யில நல்லாவே செய்திருக்கீங்க...
நான்- நீங்க மணமக்களுக்கு உறவினருங்களா?
அவர்- இல்லிங்க.
நான்- தெரிஞ்சவங்களா?
அவர்- இல்லிங்க. சும்மா கேட் கிராஷ் பண்ண வந்தம்!

What a riot!

கிச்சடி பிடிச்சிருந்தா திரட்டிகளில் ஓட்டுப் போட்டுடுங்க...

Sunday 9 August 2009

சிறுகதைப்போட்டியில் பரிசு பெறாதவர்களுக்கு சுஜாதா தரும் பதில்!

ஒரு சமயம், பெங்களூருக்கு என் வீட்டிற்கு ஒருத்தர் வந்திருந்தார். காலேஜில் படிக்கிறாராம். அனுப்பின கதைகள் எல்லாம் திரும்பி வந்துடுச்சு, இதைப் படிச்சுப்பாருங்கன்னு சொல்லி இருபத்தைஞ்சு சிறுகதைகளைக் கொடுத்தார்.

“என் கதைகள்ளே என்ன குறை இருக்குன்னே தெரியலை; ரொம்ப வருத்தமா இருக்கு சார். ஒண்ணுமே ஓடலை. தற்கொலை கூடப்பண்ணிக்கலாமான்னு இருக்கு”ன்னு சொல்லி ஓவென்று அழுதேவிட்டார்.

அவைகளை வாங்கிப் பார்த்தேன். காதல், ஹியூமர், சஸ்பென்ஸ் என்று பலவிதமாகவும் எழுதியிருந்தார். ஆனா சில நேச்சுரல் விஷயங்களை விட்டிருந்தார். “எந்தக் காலேஜில் படிக்கிறீர்கள்?” என்றேன். சொன்னார்.

“காலேஜ் நுழையும் வழியில் என்ன இருக்கிறது?”

கொஞ்ச நேரம் விழித்தார். “என்ன ஒரு பெரிய மரம்.”

“என்ன மரம்?”

“ஏதோ ஒரு மரம். சரியாத் தெரியலை”

“அதுல பூ இருக்கா, காய் இருக்கா?”

“அதெல்லாம் கவனிக்கலை சார்!”

“நீங்கள் தினம் புழங்கற இடம். அங்கே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கற ஆர்வம் உங்களுக்கு இல்ல. தெரிஞ்சுக்க முயற்சியும் செய்யலே. அப்புறம் எப்படி எழுத்துல வெற்றி பெற முடியும் உங்களால?” என்றேன்.

காலேஜ் காதலைப் பற்றி எழுதுகிறவர், அதைப்பற்றி வர்ணிக்க வேண்டாமா? சூழ்நிலையை விளக்க வேன்டாமா?

எழுத்தாளனோட பார்வை எப்போதும் வித்தியாசமாகவே இருக்கணும். பார்க்கிற ஒவ்வொரு பொருளையும், நிகழ்ச்சியையும் அப்படியே கற்பனையில் வர்ணிக்கப் பார்க்கணும். உதாரணத்திற்குத் தெருவுல ஒரு காட்சி நடக்குது.

பெரிய யானை ஒண்ணு நிக்கிறது. அதைச் சின்ன மனிதன் ஒருவன் அடிக்கிறான். அதுவும் பயப்படுது, அவன் சொல்படி நடக்குது. இதைப் பார்க்கிறபோது என்ன தோன்றும் நமக்கு?
இதுல பெரிசா என்ன இர்க்கும்பாங்க.

அதைப்பார்த்தா எனக்கு என்ன தோனும் தெரியுமா?

‘பெரிய யானைதான் மக்கள். பாகன்தான் அரசியல்வாதி. யானைங்கிற மக்களைப் பாகன்கிற அரசியல்வாதி ஆட்டிப் படைக்கிறான். யானை நினைச்சாப் பாகனைத் தூக்கி எறிஞ்சுடலாம், அதேபோல மக்கள் நினைச்சாலும் அரசியல்வாதியைத் தூக்கி எறிஞ்சுடலாம். ஆனா பயந்து பயந்து யானையும் அப்படிச் செய்யறதில்லை, மக்களும் செய்யறதில்லை’ இப்படித்தான் நான் கம்பேர் செய்வேன்.

கதைங்கறதே பொதுவா அனுபவம்தான். அனுபவத்தை அடிப்படையா வெச்சுத்தான் கதையே அமையுது. அதுக்காகக் கொலைக்கதையெல்லாம் எழுதறிங்களே அதுவும் அப்படித்தானான்னு கேக்கக் கூடாது! அது வேற விஷயம்.

************
இன்னொன்று, தொடர்கதை எழுதுறதை விட, சிறுகதை எழுதறதுதான் கஷ்டம்பேன். சிறுகதையிலே சொல்லவர விஷயத்தைச் சிக்கனமா, சுருக்கமா அதே சமயத்துல விளக்கமாச் சொல்லியாகணும். அதுதான் சிரமம். சிறுகதைன்னா நான்கைந்து முறை எழுதியே பிறகு அனுப்பறேன்.

************
கதையைப் பார்த்து எவரும் செலக்ட் செய்யறதில்லே, பெயரை வைத்துத்தான்னு எல்லோரிடமும் ஒரு அபிப்ராயம் இருக்கு. அது தவறு.

*************
...உடனே எனக்கு வேகம் வந்தது. அந்த வேகத்திலேயே எழுதித் தள்ளினேன். ஆரம்பத்துல பத்திரிகைகளும் வேகமாகவே அதையெல்லாம் தள்ளி விட்டுட்டாங்க. அப்புறமா படிப்படியாத்தான் பிரசுரமாச்சு.

***************
எழுதற ஒவ்வொரு விஷயத்தையும் எளிமையா, அதே சமயத்துல சுவையா எழுதனும். படிக்கிறவங்க அதோட ஒன்றிப்போகணும்.
நாம எழுதற விஷயம் படிக்கிறவங்க அனுபவத்தோட ஐக்கியமாப் போகணும். அப்பதான் எழுத்தும் வெற்றி பெறுகிறது, எழுத்தாளனும் வெற்றி பெறுகிறான். வீணா நாமும் குழம்பி, வாசகர்களையும் குழப்பறதுல அர்த்தமே இல்லை.

*************
பிறர் படிக்கவே நாம் எழுதுகிறோம். பிறர் படிக்கும்படியாகவும் எழுத வேண்டும்.

************
நல்ல தரமான கதைகள் பிரசுரமாகிவிடும். ஒருவேளை தப்பான பத்திரிகைக்கு அனுப்பினால் அது திரும்பி வரலாம். சங்கராச்சாரியார் பற்றிக் குமுத்த்திற்கு எழுதி அனுப்பினால் அவர்கள் பிரசுரிக்காமல் இருக்கலாம். கலைமகளுக்கு அனுப்பினால் அது வெளிவரலாம்.
கதையை எழுதியவுடன் ஒருவரிடம் வாசித்து, அபிப்பிராயம் கேட்க வேண்டும். நான் எனது மனைவியிடம் படித்துக் காண்பிப்பேன். அவள், “என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள்? வெளிவந்த பின்னால் பத்திரிகையில் பார்த்துக்கொள்கிறேன்...” என்று சொன்னாலும் நான் விடுவதில்லை.

என்ன சொல்கிறோம் என்பதைவிட, ஒரு எழுத்தாளனுக்கு எப்படி சொல்கிறோம் என்பது முக்கியம்.

அவசர கோலத்தில் கதை எழுதவே கூடாது. கதை எழுதி முடித்துவிட்டு பத்து நாட்கள் கழித்து, படித்துப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு வாசகனின் பார்வை வரும்.
எழுத்தாளனுக்கு ஞாபகம் மிக அவசியம். அவன் நிறைய நிறைய படிக்க வேண்டும்.

*************
கைதேர்ந்த ஒரு எழுத்தாளரே தான் எழுதியதை நான்கைந்து முறை திருத்தி எழுதுகிறார், மனைவியிடம் படித்துக்காட்டி அபிப்ராயம் கேட்கிறார், பத்து நாட்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்க்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! அதுவும் தன்னுடைய கதைகளும் ஆரம்பத்தில் பிரசுரமாகாமல் திருப்பி அனுப்பப் பட்டதாகவும் கூறுகிறார்.

பரிசு கிடைக்காமல் புலம்புபவர்கள், சுஜாதாவிடம் அழுத கல்லூரி மாணவன் மாதிரிதான் நடந்துக்கிறமான்னு பார்த்துக்கங்க!

நன்றி- விசா ப்ப்ளிகேஷன்ஸ்